Quantcast
Channel: இது தமிழ்
Viewing all 1647 articles
Browse latest View live

அழகு, பெண்மை, பாரம்பரியம்

$
0
0

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் எனும் மகுடத்தை வெல்லப் போவது யார்?

அழகிய தமிழ் மகள் மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன.

WoW Celebration‘வாவ் செலிப்ரேசன்’ எனும் இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் ‘டேக் கேர் இந்தியா’ எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது.

அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி.

Take Care Indiaஇந்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ்ப் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம். மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில், போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன.

18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ்ப் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit எனும் வலைதளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

மனோரமா

மறைந்த பத்மஸ்ரீ ஆச்சி மனோரமா, ‘அழகிய தமிழ் மகள்’ எனும் உலகத் தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகுப் போட்டியைத் துவக்கி வைத்தார். இந்தப் போட்டி, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை ஒரே பண்பாட்டுத் தளத்தில் இணைக்க முனைப்பாய்ச் செயல்படுகிறது. கருண் ராமன் (ஃபேஷன் வடிவமைப்பாளர்), நடிகை ஐஸ்வர்யா (‘காக்கா முட்டை’ பட நாயகி) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இதற்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விரைவில் இசை விமர்சனம்

$
0
0

Viraivil Isai Review

சுசி எனும் சுதந்திர சேகரனும், ஏ.ஆர்.ராமன் எனும் ஏ.ரங்கராமானும் நண்பர்கள். சுசிக்கு இயக்குநராகவும், ராமனுக்கு இசையமைப்பாளராகவும் திரைப்பட உலகத்தில் பரிணமிக்க வேண்டுமென்பது கனவு. கிராமத்திலிருந்து ஓடி வந்த அவர்களின் கனவு நனவானதா இல்லையா என்பதே படத்தின் கதை.

மறைந்த நடிகர், தமிழகத்து ஜேம்ஸ் பாண்ட் என்றழைக்கபடும் ஜெய் ஷங்கர் அவர்களின் மகன் சஞ்சய் ஷங்கர் இப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகிவுள்ளார். நாற்பது வயதில் நடிப்பாசை ஏன் வந்தது என்ற சுய எள்ளலோடு கலகலப்பாக அறிமுகமாகியுள்ளார். எனினும், தனித்த அடையாளங்களோடு கவனத்தை ஈர்க்க, தோதான காட்சிகள் அவருக்குக் கிடைக்கவில்லை. வருகின்ற காட்சிகளிலும், ஜெய் ஷங்கரை நினைவுபடுத்திய வண்ணமே உள்ளார்.

காதல் வசமாக இளைஞர்கள் தலைகீழாய் நின்று முட்டி மோதி மண்டை உடைத்துக் கொள்ளும் இக்காலத்தில், நாயகர்கள் இருவருக்கும் எத்தகைய சிரமுமில்லாமல் காதல் கனி தானாய்க் கனிந்து விழுவது ஆச்சரியத்திலும் பெரும் ஆச்சரியம். நாயகிகளாக அர்ப்பணாவும், ஷ்ருதி ராமகிருஷ்ணனுன் நடித்துள்ளார்கள். அர்ப்பணா அறிமுகமான ஜோரில் ஒரு பாடலுடன் காணாமல் போக, தாமதமாக அறிமுகமாகும் ஷ்ருதி ராமகிருஷ்ணனோ படத்தில் முக்கியமான பங்கு வசிக்கிறார்.

கதையை எழுதி இயக்கியுள்ளார் வி.எஸ்.பிரபா. கோடம்பாக்கத்து இளைஞர்களின் போராட்டத்தை வலியினோடோ, அல்லது முழுதும் நகைச்சுவையாகவோ கூறியிருக்கலாம். இரண்டையும் கலந்து வழங்க முற்பட்டதால், கதைப்போக்கின் மாற்றத்தால் ஓர் அசூயை நேருகிறது. படத்தின் தொடக்கம் முதலே இழையோடும் அசுவாரசியத்தைக் கலைந்திருக்கலாம். நாயகர்களின் வெற்றியோ, தோல்வியோ நமதாகக் கடத்தப்படவில்லை. நாயகர்களான மகேந்திரனோ, திலீப் ரோஜரோ ஒட்டாமல் மூன்றாம் நபர்களாகத் தோன்றி மறைகிறார்கள்.

நாயகர்கள் மீது அக்கறையும் பாசமும் கொண்ட தேநீர் கடை முதலாளியாக டெல்லி கணேஷ் நடித்துள்ளார். மற்ற கதாபாத்திரங்களின் மத்தியில் அனுபவச் சிங்கமாகக் கம்பீரமாய் நிற்கிறார் அவர். கோடம்பாக்க கனவுகள், பலருக்கும் கவிதை போலே கனவாக முடிந்துவிடுகிறது. அந்த வேதனையையும் படத்தில் பதியப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத திறமை தண்டனைக்குச் சமமாகும். திறமையும் விடாமுயற்சியும் இருந்தால், எதிர்ப்படும் இடையூறுகளுக்கு மத்தியில் ஒருநாள் திறமை அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையை படம் விதைக்க முனைகிறது.

இனியொரு விதி செய்வோம்.!

$
0
0

அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

குடும்ப வன்முறை

தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக பயமுறுத்துவது, குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு வெளியேறி விடுவேன் என்றோ, குடும்ப உறுப்பினர்களை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்றோ பயமுறுத்துவது என பல்வேறு முகங்களைக் கொண்டதுதான் குடும்ப வன்முறை.

படித்தவர், பாமரர், ஆண், பெண், இனம், மொழி, மதம், நாடு என எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் ஒரே விஷயம் இந்தக் குடும்ப வன்முறை என்பது கசப்பான உண்மை. இதனால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் அரசாங்கம் இப்போது தான் முனைப்பு காட்டத் துவங்கி இருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் நடவடிக்கைகளோ, தண்டனைகளோ நிச்சயம் போதாது தான். ஆனாலும் ஏதோ ஒரு வகையில் தீர்வுகள் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது என்பது மெலிதான ஆறுதல்.

பெரும்பாலும் வீட்டிலிருக்கும் ஆண் உறுப்பினரால்தான் இத்தகைய வன்முறை சக குடும்ப உறுப்பினர்களின் மீது நிகழ்த்தப்படுகிறது. இதில் பெண்களும், குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அரிதாக சில ஆண்களுக்கும் இந்த அவலம் ஏற்படுவதுண்டு.

ஆணாதிக்கம்

சுமூகமாய், சந்தோஷமாய்த் துவங்கும் கணவன் மனைவி உறவில், மிகையான சுயநல எதிர்பார்ப்புகளே பிரச்சினைகளின் ஆரம்பப் புள்ளியாக இருக்கிறது. தன்னுடைய எதிர்பார்ப்புகளை எல்லோரும் ஏற்றுக் கொண்டு அதன் படி மற்றவர்கள் நடக்க வேண்டும் என நிர்பந்திக்கும் சூழலில்தான் குடும்ப அமைதி கெட்டு உரசல்கள் ஆரம்பமாகின்றன. பரஸ்பரப் புரிதலும், அனுசரனையும் உள்ள குடும்பங்களில் இத்தகைய சூழல் உருவாவதே இல்லை. அவர்கள் தங்களுக்குள் விவாதித்து விட்டுக்கொடுத்து நிம்மதியாய் வாழ்கின்றனர்.

என்னதான் படித்திருந்தாலும், பொருளாதாரத்தில் தற்சார்பு உடையவர்களாக இருந்தாலும் குடும்பம் என்கிற அமைப்பில் சிக்கியிருக்கிறோம், அதிலிருந்து மீளமுடியாது என்கிற மனசிக்கலில் மாட்டிய பெண்கள், இது தான் என் தலையெழுத்து என்று இரவில் தலையணையில் முகம் புதைத்து அழும் கதைகள் ஏராளம். வெளியில் சொன்னால் அவமானம், தன்னுடய எதிர்காலம், சமூகத்தில் தன் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்கிற பதற்றத்தில் அடிகளையும், அவமானங்களையும் தங்களுக்குள் புதைத்துக் கொண்டு புழுங்க ஆரம்பிக்கும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கும், மனச்சிதைவுக்கும் ஆளாகின்றனர்.

அகம்பாவம்பெரியார் சொன்னதைப் போல ஒரு பெண்ணுக்கு நிகழ்த்தப்படும் அநீதி அந்தப் பெண்ணோடு முடிவதில்லை. அது தொடர்ந்து வரும் தலைமுறைகளையே பாதிக்கும் என்பதை நம்மில் எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறோம்? இது புரியாத ஆண்களோ தன் துணையை அடக்கி விட்டோம் என்ற மதர்ப்பில், அவளைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வதே தன் ஆண்மைக்கு அழகு என்கிற மனவிகாரத்தை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டி மேலும் மேலும் அடக்குமுறையைத் தீவிரமாக்குகிறான்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் தாங்கள் வன்முறைக்கு ஆளாகிறோம் என்பதே பல பெண்களுக்கும் தெரிவதில்லை. மனைவி என்பவள் கணவனின் உடமை என்றும், அதனால் தன்னை அடிக்கவோ, துன்புறுத்தவோ கணவனுக்கு எல்லா வகையிலும் உரிமை இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் பேதைப் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் அனுபவிக்கும் உடல் மற்றும் உளவியல் சித்திரவதைகள் பெரும்பாலும் வெளியில் தெரியவருவதே இல்லை.

படிக்காத பெண்கள் கூட சமயங்களில் சட்டென முடிவெடுத்து விடுகிறார்கள். படித்த பெண்கள் தான் சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அந்தஸ்திற்கு(?) பங்கம் வந்து விடுமோ என்று பயந்து இக்கொடுமையை அனுபவிக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வையும், சமூக ஆதரவையும் பெற்றுத் தரும் இடத்தில்தான் அரசின் பங்கு முக்கியமானதாகிறது.

எனக்குத் தெரிந்து இங்கே ஒரு கல்லூரி பேராசிரியர் நன்கு படித்தவர். பொதுவெளியில் பண்பானவர் என பெயரெடுத்தவர். ஆனால் வீட்டில் தன் மனைவியை கொடுமை செய்வது அவருக்கு வாடிக்கை. அதுவும் அவர்களின் குழந்தைகள் முன்னிலையில். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அந்தப் பெண் தற்கொலைக்கு யோசிக்கும் அளவுக்கு போய்விட்டார். தன் குழந்தைகளை நினைத்து அந்த முடிவை கைவிட்டாலும் தொடர் சித்திரவதைகள் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை.

இந்தியாவில் இருந்த அவரின் பெற்றோர்களோ உதவ முடியாத கையறுநிலையில் இருந்தனர். ஒரு கட்டத்தில் நிலைமை எல்லை மீறிப் போகவே சில நல்ல நண்பர்களின் உதவியால், இன்று தனியாகி, பெருஞ்சோகத்துடன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் மூத்த மகன் கல்லூரி படிப்பைத் தொடர முடியாமல் மன அழுத்தத்திற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான். ஒரு தனி மனிதரின் வக்கிரச் செயல்பாட்டினால் ஒரு குடும்பம் சிதறி மீளவியலாச் சிக்கலில் தவிக்கிறது.

சைக்கோஇந்தியாவிலிருந்து பெருங்கனவுகளுடன் இங்கு வரும் பெண்களில் பலரும் பலவிதங்களில் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்ல முடியாதவர்களாய் நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். சில சைக்கோ கணவர்களிடம் சிக்கிய பெண்களின் நிலைமை இன்னும் பரிதாபம். நல்ல நண்பர்களோ, தட்டிக் கேட்க சுற்றமும் இல்லாத பெண்கள், இக்கயவர்களால் நன்றாகவே ஏமாற்றப்படுகிறார்கள். அதையெல்லாம் தனியாக எழுத வேண்டும். அத்தனை துயரக்கதைகள் இருக்கின்றன.

இந்தியர்களை விடுங்கள். பல அமெரிக்கப் பெண்களின் நிலைமையும் சொல்லிக் கொள்வதைப் போல இல்லை என்பதுதான் ஆச்சரியமான வருத்தம். எனக்கு நன்கு தெரிந்தவர். குடும்ப வன்முறையினால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர். விவாகரத்து வாங்கி பத்து வருடங்கள் ஆகிறது. இன்றும் தான் பழைய வலிகள் தந்த படபடப்பில் இருந்து மீளவே முடியவில்லை என்பார். அது பற்றிப் பேச ஆரம்பித்தாலே கண்ணீர் விட ஆரம்பித்துவிடுவார்.

நீதிமன்ற உத்தரவின் படி தன் மகளை கணவரின் வீட்டில் கொண்டு விட்டுத் திரும்பக் கூட்டிவரும் நிகழ்வுகளின் போது எந்த நேரத்திலும் தன் உயிருக்கு அச்சுறுத்தலும், பயமும் இருப்பதாக கூறுவார். இது போதாதென, அப்பாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மகளும் இவருக்கு உளவியல் ரீதியாய் பிரச்சினை தர, குழந்தையை மனநல மருத்துவரிடம் அழைத்துப் போய் ஆலோசனைகளும், மருந்து மாத்திரைகள் என சிகிச்சை செய்ய வேண்டிய அவலம். சின்னஞ்சிறு வயதில் பள்ளியில், விளையாடும் இடங்களில், மற்ற குழந்தைகளுடன் என்று எங்கும் பிரச்னைகள். எப்படி எதிர்கொள்வது எனத் தடுமாறி நிற்கிறார் என் அமெரிக்கத் தோழி.

பெண்கள் மீதான வன்முறை

இப்படி பல பெண்கள் வெளியில் சிரித்துக் கொண்டும் உள்ளுக்குள் அழுது கொண்டும் ஒவ்வொரு நாளையும் குழந்தைக்காக வாழ்கிறேன் என்று நடைப்பிணமாக வாழ்கிறார்கள். கணவர் அடித்துத் துன்புறுத்துகிறார் என்றால் சாட்சி இருக்கிறதா என்று அதிகாரிகள் கேட்கிறார்கள். அவளின் மனப் போராட்டத்திற்கு எதை சாட்சியாகக் கேட்பார்களோ?

அரசின் தற்போதைய அணுகுமுறைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சங்கடங்களைத் தந்து மனப்போராட்டத்தை அதிகரிக்கிறது. பெண்கள் பலரும் அனுபவிக்கும் இத்தகைய கொடுமைகளை ஆண்கள் சிலரும் அனுபவித்தாலும் பெரிய அளவில் பாதிக்கபடுவது அதிகம் பெண்களும், குழந்தைகளுமே.

இன்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ உதவும் மையங்கள் பல உள்ளன. முடிந்த வரையில் அந்த மையங்களும் அவர்களை நாடி வரும் பெண்களுக்கு உதவுகிறார்கள். இருந்தும் பலரும் தங்கள் பிரச்னைகளை வெளிப்படையாகப் பேச முன் வருவதில்லை. குடும்ப வன்முறை எல்லை மீறும் போது பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் விஸ்வரூபம் எடுத்து விடுகிறது. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவைகளை வளர்ந்த பிறகு வேரோடு அறுத்து எறிந்து வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட ஒரு சிலருக்குத் தான் மன வலிமையையும் பண வலிமையையும் இருக்கிறது.

பெண்ணைத் தன்னுடைய உடைமையாக, போகப் பொருளாக மட்டுமே பார்க்காமல், தன் சக தோழியாய் தன் வாழ்வின் பாகமாய்ப் புரிந்து, தன் இணையை மதித்து செயல்படும் ஆண்கள் உள்ள குடும்பங்களில் இணக்கமும் அன்பும் இயல்பாய்த் தழைத்தோங்கி நிற்கிறது.

தோழி

ஆண்களோ, பெண்களோ அவர்களுக்குள் சகிப்புத்தன்மையையும், அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் பண்பையும் சிறு வயதில் இருந்தே வளர்த்தெடுக்க வேண்டியது அவசியம். இதெல்லாம் ஒரே நாளில் வருவதில்லை. இந்த இடத்தில்தான் ஒரு தாயின் பங்கு , ஒரு குடும்பத்தின் பங்கு மகத்தானதாகிறது.

இப்படி வளர்க்கப்படும் குழந்தைகளே நாளைய குடும்ப அமைப்பின் வேர்களாக விளங்குவார்கள். நல்ல குடும்ப அமைப்பில் மனித நேயம் இயல்பானதாக இருக்கும். இத்தகைய இயல்புகளை வளர்த்தெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகிறது.

குடும்ப வன்முறையற்ற எதிர்காலத்திற்கு நம்மால் ஆன அத்தனையும் செய்திட இக்கணத்தில் உறுதியேற்போம்.

விதி சமைப்போம்

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

- லதா

கூஸ்பம்ப்ஸ் விமர்சனம்

$
0
0

Goosebumps Tamil Review

கூஸ்பம்ப்ஸ், தமிழில் ‘மயிர்க்கூச்சு’ எனச் சொல்லலாம். மயிர்க்கூச்சு என்றால் பயத்தினாலோ, குளிரினாலோ உடலிலுள்ள முடிகள் குத்திட்டு நிற்கும் நிலை.

ஜக்காரி ஒரு புத்தகத்தைத் தெரியாத்தனமாகத் திறந்து விடுவதால், அதிலிருந்து எட்டி எனும் பனி மனிதன் வெளியில் வந்துவிடுகிறான். அதனைத் தொடர்ந்து நடக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் சம்பவங்களே படத்தின் கதை.

Slappyஸ்லாப்பி எனும் வில்லன் பொம்மை உயிர் பெற்றதும் படம் சுவாரசியமாகிவிடுகிறது. அது, அனைத்துப் புத்தகங்களிலுமுள்ள கோரமான/ பயங்கரமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுப்பதோடு, அவர்களை வழி நடத்தவும் செய்கிறது. மேடிஸன் எனும் ஊரின் தகவல் தொடர்பை முற்றிலும் துண்டித்து. அங்குள்ளவர்களைத் தனிமைப்படுத்தி விடுகிறது ஸ்லாப்பி.

ஆர்.எல்.ஸ்டைன் எனும் அமெரிக்க எழுத்தாளர், 1992 இல் இருந்து 1997 வரையிலும், ‘கூஸ்பம்ப்ஸ்’ என்ற தலைப்பில் எழுதிய சிறுவர் திகில் கதைகளைத் தழுவி எடுக்கப்பட்ட படமிது. அந்த திகில் கதைகளைப் படித்திருந்து, அந்தக் கதாபாத்திரங்களை அறிந்திருந்தால் படத்தோடு சுலபமாகப் பொருத்திப் பார்க்க இயலும். இல்லையெனில், படத்தை அதன் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்காக மட்டுமே ரசிக்க இயலும். அதுவும் ஓநாய் மனிதனின் வாய் க்ளோஸ்-அப்பில் காட்டப்பட்டு, அதன் வாயில் இருந்து ஒழுகும் எச்சில் நம் முகத்தில் விழுவது போன்ற முப்பரிமாணக் (3-டி) காட்சியில் உண்மையிலேயே மயிர்க்கூச்சு ஏற்படுகிறது.

ஓநாய் மனிதன்

இந்தக் கதையின் நாயகனுக்கு, ஆர்.எல்.ஸ்டைன் எனும் அந்த எழுத்தாளரின் பெயரையே சூட்டியுள்ளார்கள். நகைச்சுவை நடிகரான ஜாக் பிளாக், அந்தக் கதாபாத்திரத்தில் அசத்தியுள்ளார். வில்லன் பொம்மையான ஸ்லாப்பிக்கும், மற்றவர்கள் கண்ணுக்குத் தெரியாத சேட்டைச் சிறுவனுக்கும் அவரே படத்தில் குரலும் கொடுத்துள்ளார்.

திரைக்கதையில் பெரிதாக திருப்பங்கள் வைக்காமல், சிறுவர்களை மனதில் கொண்டு நககைச்சுவையாக எடுத்துள்ளனர். பயங்கரமான கதாபாத்திரங்கள் அனைத்தும் உயிர் பெற்றுவிட்டால், என்னச் செய்யும் என்பதை கவரும் விதமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஸ்லாப்பியின் மந்தகாசப் புன்னகையும், விஷூவல் எஃபெக்ட்ஸும் நிச்சயமாக பெரியவர்களையும் ஈர்க்கும்.

பனி மனிதன்

இஞ்சி இடுப்பழகி இசை வெளியீட்டு விழா படங்கள்

இஞ்சி இடுப்பழகி –படக்குழுவினர்

$
0
0

இஞ்சி இடுப்பழகி

நடிகர்கள்:

>> அனுஷ்கா
>> ஆர்யா
>> சோனல் செளகன்
>> ஊர்வசி
>> பரத்
>> பிரகாஷ் ராஜ்

பனிக்குழு:

>> தயாரிப்பு நிறுவனம் - பி.வி.பி. சினிமா
>> தயாரிப்பாளர் - பரம் V.பொட்லூரி
>> இயக்கம் - K.S.பிரகாஷ் ராவ்
>> ஒளிப்பதிவு - நிரவ் ஷா
>> இசை - மரகத மணி
>> கலை - ஆனந்த் சாய்
>> படத்தொகுப்பு - ப்ரவின் புடி & ரூபன்
>> உடைகள் - T.பிரஷாந்தி
>> பாடல் - மதன் கார்க்கி
>> வசனம் - R.பாலாஜி & R.S.பிரசன்னா
>> நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா & ஃபிரோஸ் கான்
>> டிசைன்ஸ் - தண்டோரா
>> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

$
0
0

ஜல்லிக்கட்டு Jallikkattu

தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது.

தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார்.

Photojournalist J.SureshJ.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது.

தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்.

வேதாளம் விமர்சனம்

$
0
0

Vedhalam Tamil Review

மீண்டுமொரு ‘தல’ தீபாவளி.

தன் தங்கைக்காகவே வாழும் பாசக்கார அண்ணன் கணேஷ். யாரிந்த கணேஷ், தன் தங்கைக்காக என்ன என்னெவெல்லாம் செய்கிறான் என்பதே படத்தின் கதை.

வீரம் போலில்லாமல், இயக்குநர் சிவா கதைக்குக் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். எனினும் முதல் பாதியின் அசுவாரசியம் முகத்தில் அடிக்கிறது. கதைக்குக் கிஞ்சித்தும் உதவாத நகைச்சுவைக் காட்சிகள், ‘உனக்கு குழந்தைச் சிரிப்பு’ என்ற தொடர் முகஸ்துதிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. அண்ணன் – தம்பி பாசத்தை ரசிக்கும்படியாகச் சொல்லிய சிவா, அண்ணன் – தங்கை பாசத்தை ரசிக்கும்படி சொல்லத் தவற விட்டுவிட்டார்.

‘என்னடா இது?’ என்று யோசனையில் இருக்கும்போதே, வான வேடிக்கையுடன் ‘தீபாவளிக் கொண்டாட்டம்’ படத்தின் இரண்டாம் பாதியில் தொடங்குகிறது.

அஜித் குமாரின் வில்லத்தனம் அட்டகாசமாய் மிளிர்கிறது. அவர் வில்லன்களைப் பார்த்துப் பழிப்பு செய்யும் விதமாய்ச் சிரிப்பதும், சிரித்துக் கொண்டே சண்டையிடுவதும் ரசிக்க வைக்கிறது. இதை அவர் முதல் பாதியிலும் செய்யத்தான் செய்கிறார். ஆனால், அதையே காரணக்காரியங்களோடு இரண்டாம் பாதியில் பொருத்திப் பார்க்கும்பொழுது ரசிக்க முடிகிறது.

வசன உச்சரிப்பிலும் உடல்மொழியிலும் பின்னிப் பெடலெடுக்கும் வடிவேலு இல்லாத குறையைப் பூதகரமாகப் பெரிதுபடுத்திக் காட்டுகிறார் சூரி. வடிவேலாகும் முயற்சியை கைவிட்டு, ரசிகர்களைச் சோதிப்பதை அவர் கைவிட வேண்டும். இரண்டாம் பாதியில் வரும் அப்புகுட்டி ரசிக்க வைக்கிறார். கொல்கத்தா காளியாக, அஜித்தின் அறிமுகத்திற்கு உதவும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வழக்கம் போல் ஈர்க்கிறார். சொல்லப் போனால் அஜித்தின் அறிமுகத்தைச் சாதாரணமாக்கி விடுமளவு ராஜேந்திரனின் ‘ஸ்க்ரீன் ப்ரசென்ஸ்’ படத்துக்குப் படம் மெருகேறி வருகிறது.

அஜித்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்தான் படத்தின் நாயகி. தமிழ் எனும் பாத்திரத்தில், படம் நெடுக்க வருகிறார். ஆடல், பாடல், லூசுத்தனம் என நேர்ந்து விடப்பட்ட ஸ்ருதி ஹாசனுக்குக் கிடைக்காத அரிய வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தியுள்ளார் லட்சுமி மேனன்.

‘ரதகஜ துரக பதாதிகள் எதிர்த்தினும் அதகளம் புரிந்திடும் வீரம்’ என வீரம் படத்தின் அட்டகாசமான தீம், எதையும் யோசிக்க விடாமல் முழுப் படத்தையும் சுவாரசியப்படுத்தி இருந்தது. அந்த மட்டில் அநிருத் சறுக்கியுள்ளார் என்றே சொல்லவேண்டும். ‘ஆலுமா டோலுமா’ என்ற ரோகேஷின் வரிகளில் திரையரங்கம் அதிர்கிறது. இயக்குநர் சிவா, அஜித்தைக் கொண்டு இரண்டாம் பாதியில் அதகளம் புரிந்துள்ளார்.


தூங்கா வனம் விமர்சனம்

$
0
0

Thoonga Vanam Tamil Review

இரவில் தூக்கத்தைத் தொலைத்தவர்கள் உல்லாசமாய் இருக்கும் விடுதியில், திவாகரின் மகனைக் கடத்தி வைக்கின்றனர். திவாகர் எப்படி தன் மகனை மீட்கிறார் என்பதே படத்தின் கதை.

மீண்டும் ஓர் உத்தம அப்பா கதாபாத்திரத்தில் கமல் ஹாசன். பனிச் சுமையின் பாதிப்பு காரணமாக மனைவி விட்டுப் பிரிந்த கழிவிரக்கத்தில் உழல்பவர். கமலுக்கு, இத்தகைய கதாபாத்திரம் தண்ணீர் பட்டபாடாகி விட்டாலும். ஒவ்வொரு முறையும் வித்தியாசம் காட்ட அவர் தவறுவதே இல்லை. உதாரணமாக, ‘ஜீன்ஸு, ஜீன்ஸு.. டி.என்.ஏ.’ என அவர் மகனை நொந்து கொள்ளும் காட்சியைச் சொல்லலாம். எழுத்தாளர் சுகாவின் வசனங்கள் ஆங்காங்கே புன்னகையை வரவேற்கிறது. சாம்ஸும் தன் பங்கிற்குக் கலகலக்க வைக்கிறார்.

பிரகாஷ்ராஜ், கிஷோர், சம்பத் என பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருந்தாலும் மனதில் பதிய மறுக்கிறார்கள். ஆனால், கமலுக்கு இணையாக அசத்துகிறார் பிரகாஷ் ராஜின் அசிஸ்டெண்ட்டாக வரும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டத்தில் சிறுவனின் தந்தை காளையனாகவும், ஜிகர்தண்டாவில் நடிப்பு சொல்லித் தரும் முத்துவாகவும் நடித்தவர்). கமல், பிரகாஷ் ராஜ் என்ற ஜாம்பவன்கள் ஆக்கிரமிக்கும் ஃப்ரேமிலேயே, அவர் இந்த மாயத்தைச் செய்கிறார். ஒவ்வொரு படத்திலும் தனது தோற்றத்தை மாற்றிக் கொள்வதில், கமலுக்குச் சவால் விடுமளவு திறமைசாலி என்பது மிகையில்லை.

காவல்துறை அதிகாரி மல்லிகாவாக த்ரிஷா. ஆச்சரியப்படுத்தும் தோற்றப் பொலிவோடு, கதாபாத்திரத்துக்கு ஏற்றாற்போல் கன கச்சிதமாகப் பொருந்துகிறார். கெளதமியின் உடைத் தேர்வும் அதற்கொரு காரணம். அவரவர் உடை, அவர்களது குண நலன்களைப் பிரதிபலிக்கிறது. அதே போல், ஜிப்ரானின் பின்னணி இசையும் படத்தோடு நம்மை ஒன்ற வைக்க உதவுகிறது.

ஃப்ரென்ச் படமான ‘ஸ்லீப்லெஸ் நைட் (நுய் ப்ளான்ஷ்)’-இற்கு, திரைக்கதை அமைத்துள்ளார் கமல். அவருக்கே உரிய பிரத்தியேக நுட்பங்களால் மெருகேற்றியுள்ளார் என்றே சொல்லவேண்டும். கீழே விழும் ஆம்லெட்டைக் கழுவுவது, ஸ்னூக்கர்ஸ் டேபிளில் மறிப்பவனின் குறியில் பந்தை எறிந்து ‘எங்கப்பா’ என திவாகரின் மகன் கோபத்தை வெளிபடுத்துவதென நிறைய விஷயங்களைச் சொல்லலாம். கமலின் மகனாக நடித்திருக்கும் அமன் அப்துல்லா மிகச் சிறந்த தேர்வு.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரு விடுதிக்குள் படமாகப்பட்டுள்ளது. இதே போன்ற க்ளோஸ்ட் லோக்கேஷனில், சலிப்பு வராத வண்ணம் படத்தை நகர்த்துவது பெரும் கலை. அதுவும் எல்லாமே நைட் எஃபெக்ட் காட்சிகள் (தன்னை மறந்து நடனமாடும் கூட்டத்துக்கு மத்தியில் கேமிராவை கையில் தூக்கிக் கோண்டே, கதாபாத்திரங்களின் பின்னால் ஓடி படம் பிடித்திருத்தால் ஒழிய, இவ்வளவு கச்சிதமாக வந்திருக்காது என்று தோன்றுகிறது). காருக்குள் பொருத்தப்பட்ட கேமிராவின் கோணத்தில் இருந்து, இரவின் வண்ணப் புள்ளிகள் மெல்ல ஒரு மாநகரச் சாலையின் விடியலுக்குள் புகும் பொழுதே படம் உங்களை ஈர்க்கத் தொடங்கிவிடும். அந்த ஈர்ப்பை, கடைசி வரை தக்க வைக்கிறது ஷான் மொகமதின் படத்தொகுப்பு.

ராஜேஷ் M. செல்வாஆண்கள் வெட்கப்படும் தருணம் அழகானது என்பார்கள். ‘மன்னர் முன் நான் இவ்வளவு பேசியதே அதிகம்’ என உத்தம வில்லன் படத்தில், கமல் முன் வெட்கப்பட்ட ராஜேஷ்.. எப்படி கமலையும், இதர நடிகர்களையும் இயக்கியிருப்பார் என்று நினைத்துப் பார்க்கவே பிரமிப்பாய் இருக்கிறது. வரம் பெற்ற இடத்திலேயே, வரத்தைப் பரீட்சித்துப் பார்த்து விட்டார் ராஜேஷ். படம் பார்ப்பவர்களின் கவனத்தை தொடக்கத்திலிருந்து இறுதி வரை சிதற விடாமல் ராஜேஷ் பார்த்துக் கொள்வதிலிருந்தே, பெற்ற வரத்தை சரியாக பயன்படுத்தப்படுத்தியுள்ளார் என்பதை அறியலாம்.

விமல் – நந்திதா –அஞ்சல

$
0
0

அஞ்சல Anjala

பிரபல சண்டை இயக்குநர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில், விமலுக்கு ஜோடியாக நந்திதா நடிக்கும் அஞ்சல படத்தின் விநியோக உரிமையைப் பெற்று இருப்பவர் ஆரா (Auraa) சினிமா மகேஷ் கோவிந்தராஜ்.

நடிகர் விமல் உடைய படங்களுக்கு விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், மற்றும் ரசிகர்கள் இடையே என்றுமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். சகல தரப்பினரையும் திருப்தி செய்யும் படமாக அவரது படம் இருக்கும் என்ற கணிப்பை அவர் என்றுமே பொய்க்க விட்டதில்லை. அந்த வகையில் தங்கம் சரவணன் இயக்கத்தில் உருவாகும் அஞ்சல திரைப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரசிகர்களைக் கவரும் வகையில் பல அம்சங்கள் படத்தில் இருந்தாலும், பிரபல இசை அமைப்பாளர் கோபி சுந்தர் படத்திற்கு இசை அமைத்துள்ளார் என்பது பிரதானமான அம்சம். ‘Bangalore days’, ‘என்னு நிண்டே மொய்தீன்’ ஆகிய மலையாளப் படங்களின் இசை மூலம் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட இசை இவருடையது. அஞ்சல படத்தின் பாடல்கள் நிச்சயம் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கும்.

“19 ஆம் தேதி அன்று படத்தின் இசை வெளியிடப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து வெகு விரைவில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறார் அஞ்சல” என்று கூறினார் தயாரிப்பாளர் திலீப் சுப்புராயன்.

அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

$
0
0

அஞ்சல பசுபதி

“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த டீக்கடையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றிய கதை” என்றார் இயக்குநர் தங்கம் சரவணன்.

“நான் நடித்த படங்களிலேயே, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சில படங்களில் இதுவும் ஒன்னு” என்றார் பசுபதி. தந்தை, மகன் என இரு வேடங்களில் பசுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி.உதயக்குமார், இப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். “ஷூட்டிங் ஸ்பாட்லயே, பசுபதியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய் கை தட்டினேன். அவ்வளவு அருமையாக கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இதற்கு முன், சிவாஜி சாரின் நடிப்பைப் பார்த்து கை தட்டியிருக்கேன். அதன் பின் பசுபதிக்குத்தான்” என்றார் இயக்குநர் உதயக்குமார்.

“நான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். பசுபதி சார் நடிச்ச போர்ஷனைப் பார்க்கிறப்ப, ஒவ்வொரு முறையும் மனசை ஏதாவது செய்யும். அல்லது அழுதுடுவேன். வெயில் படம் பார்த்துவிட்டு, ‘யார்றா இவர்? இப்படிப் பண்ணியிருக்கார்!’ என வியந்திருக்கேன். அவர் என் படத்திலேயே நடிச்சிருக்கார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமா இருக்கு” என்றார் படத்தின் தயாரிப்பாளர் திலீப் சுப்புராயன்.

படம் நிச்சயமாக, பல விருதுகளை அள்ளிக் குவிக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளனர் அஞ்சல படக்குழுவினர்.

அஞ்சல –இசை வெளியீட்டு விழா படங்கள்

ஸ்பெக்டர் விமர்சனம்

$
0
0

Spectre Tamil Review

ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ்.

இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார்.

வில்லன் ஒரு பட்டனைத் தட்டினால் உலகமே அழிந்து விடும்; அப்பொழுது பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக வந்து உலகைக் காப்பாற்றுவார் என்ற ஒன்-லைனை, ஸ்கைஃபால் படத்தில் உடைத்தது போலவே இப்படத்திலும் உடைத்துள்ளார் மெண்டீஸ். ‘நீ எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டாலும்.. நீ ஒரு கொலைக்காரன் என்பதுதான் ஒரே நிஜம்!’ என 007 கதாபாத்திரத்தைப் பற்றிய பிம்பத்தைக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பதிய வைக்கிறார் மெண்டீஸ். ஒரு கட்டத்தில், ‘என் தொழில் கொல்வது’ என பாண்ட்டையே நம்ப வைத்து விடுகின்றனர். ;)

ஐயன் ஃப்ளெமிங்கின் சாகச நாயகனை மனிதனாக்கி அழகு பார்த்துள்ளார் மெண்டீஸ். அவரது திரைக்கதை அமைக்கும் குழு இம்முறை முடியால் மலையைக் கட்டி இழுத்துள்ளனர். கதைகள், கிளைக்கதைகள் என படம் இரண்டரை மணி நேரம் நீண்டாலும், அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி ஒரு தனி மனித விரோதம் என்றே முடித்துள்ளார். ஆம், ஸ்கைஃபாலும் இதே கதைதான்.

படத்தின் ஓப்பனிங் காட்சி, மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் தி டெட் (Day of the Dead)’ பிரம்மாண்டக் கொண்டாட்டத்தில் இருந்து அமர்க்களமாகத் தொடங்குகிறது. ஆனாலும் அந்த ஆரம்பப் பரபரப்பு பின் படத்தில் மெல்ல மறைந்து விடுகிறது. காட்சிகளில் பரபரப்பு இல்லையே தவிர, திரைக்கதையின் விறுவிறுப்பு கடைசி வரை குறையவே இல்லை. காரணம் பாண்ட்டுக்கு பெரிய டெட்லைன் என எதுவுமில்லை. படம் ஒரு தேடல். பாண்ட், தன்னைத் தானே உணரவும் தன் கடந்த காலத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. வசனங்களில் உள்ள கிண்டலும் நகைச்சுவையும், படத்தின் சுவாரசியத்தை கடைசி வரை தக்க வைக்கிறது. நாம் தான் சிரிப்போமே அன்றி, டேனியல் க்ரெய்க் தன் ரஃப் & டஃப் தனத்தை கடைசி வரை விடாமல் சால்ட் & பெப்பர் கெட்டப்பில் கெத்தாக வலம் வருகிறார். டாக்டர் மேடலின் ஸ்வானாக வரும் ஃப்ரெஞ்ச் நடிகை லெயா செதூஸ் படத்திற்கு அற்புதமான தேர்வு. பாண்ட்டின் மாற்றத்திற்கு காரணமாக வரும் கிரியா ஊக்கியான இப்பாத்திரத்திற்கு, அனுபவம் மிக்க நடிகை தான் வேண்டுமென பிரத்தியேகமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் சாம் மெண்டீஸ். லெயா செதூஸ் கலக்கிவிட்டார்.

‘ஸ்பெக்டர்’ எனும் நிறுவனம், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்குப் புதிதன்று. பழைய பாண்ட் பட வில்லன்களை எல்லாம் ஸ்பெக்டரின் அங்கத்தினராக அழகாக கொண்டு வந்துவிட்டனர். ஆனால், அந்நிறுவனத்தின் தலைவராக நடித்திருக்கும் க்றிஸ்டோஃப் வால்ஸ் புதியவர். ‘உன் எல்லா வலிகளுக்கும் நான் தான் காரணம்’ என்கிறார் 007-ஐப் பார்த்து (அப்புறம் என்ன சொன்னார்னு தெரில. வசனத்தில் ஆபாசம்னு ‘கட்’ போட்டுட்டார்களாம்! முத்தக் காட்சிகளை ‘கட்’ செய்ததோடு உங்க கடமையுணர்ச்சி நின்னிருக்கலாம் ஆஃபீஸர்ஸ். ஆனால், அதிலுமொரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. முத்தமிட்டுக் கொண்டே நிறைய விஷயங்களை மோனிகா பெல்லூச்சியிடம் கறக்கிறார்).

பட்டிஸ்டாவைச் செல்லமாக, தி அனிமல் என WWE போட்டிகளில் அழைப்பார்கள். அந்தப் பெயரை நிரூபிக்கும் வண்ணம் டெரராக அறிமுகம் ஆகிறார். இவர் ஸ்பெக்டரின் கொலையாளி; நமது பாண்ட் அரசாங்கக் கொலையாளி என்பதுதான் படம் உணர்த்தும் நகைமுரண். இவர்கள் இடும் சண்டையை விட, ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஓயத்தே வான் ஓயதேமா (Hoyte van Hoytema)-வின் ஒளிப்பதிவும், சாம் மெண்டீஸின் ஆஸ்தான இசையமைப்பாளரான தாமஸ் நியூமேனின் பின்னணி இசையும் போட்டி போட்டுக் கொண்டு நம்மை ஆக்கிரமிக்கின்றன.

ஜனநாயகத்தின் மீது அவநம்பிக்கை கொண்டு உலகையே கண்காணிக்க நினைக்கும் பிரிட்டிஷ் உயரதிகாரி, CNS (Centre for National Security) லோகோ மீதே விழுவது நல்ல குறியீடு.

Spectre is spectacular!

ஒருநாள் இரவில் விமர்சனம்

$
0
0

ஒருநாள் இரவில் விமர்சனம்

போதையில் சபலத்துக்கு ஆட்படும் ஒரு நடுத்தரக் குடும்பத்தினன், ஒருநாள் முழுவதும் அனுபவிக்கும் மான ரோஷப் பதற்றம்தான் படத்தின் கதை. 2012 இல் வெளியான ‘ஷட்டர்’ எனும் மலையாளப் படத்துக்கு முறைப்படி உரிமை வாங்கி, ரீமேக் செய்து தமிழ்ப் படமாக வழங்கியுள்ளார் இயக்குநர் விஜய்.

இசை, பாகுபலியைத் தொடர்ந்து, சத்யராஜின் மற்றுமொரு பிரம்மாண்டப் பரிணாமமாக அவர் நடித்திருக்கும் சேகர் கதாபாத்திரத்தைச் சொல்லலாம். அவரின் தவிப்பும் பதற்றமும் பார்வையாளரையும் பீடிக்கிறது. அவருக்கு ஏற்படும் கோபம், அதாவது மகள் மீதான கோபமன்று, உடனிருப்போரின் சுயரூபம் தெரிவதால் ஏற்படும் கோபம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.

தளர்வான நடையையும், விரக்தி படிந்த தோற்றத்தையும் வைத்துக் கொண்டு யூகி சேது ஏகத்துக்கும் கவர்கிறார். நையாண்டி தர்பாரின் குரல் இன்னும் மாறவில்லையே தவிர்த்து, சிறந்த குணசித்திர நடிகராக தன்னை நிரூபித்து வருகிறார். பஞ்சதந்திரம் வேதாந்தமாக, அன்பே சிவம் உத்தமனாக, ரமணா கான்ஸ்டபிள் நாராயணனாக, இந்தப் படத்தில் இயக்குநர் சேது பாரதியாக அவர் உடல்மொழியிலும் முக பாவனையிலும் காட்டும் வித்தியாசம் பாராட்டுக்குரியது. சத்யராஜ் போல் படத்தின் குவிமையமாக இல்லாவிட்டாலும், ‘யாரோ ஒரு முகம் தெரியாத பெண்ணுக்காக இரக்கப்படும்’ இவர் தான் படத்தின் உண்மையான நாயகன்.

ஆட்டோ ட்ரைவராக சூரியாக அறிமுகமாகிவுள்ளார் ஐசரி வேலனின் பேரனான வருண். விரைவில் நாயகனாகவும் வலம் வரவுள்ளார். புதுமுகம் போலன்றி, தெரிந்த முகமாக மனதில் பதியும்படி உள்ளார். பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் தங்கமாக அனுமோல் நடித்துள்ளார். ஏற்கெனவே மூன்று தமிழ்ப் படங்களில் கேரள நடிகையான இவர் தோன்றியிருந்தாலும், இந்தப் படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்படுவார். குரலை உயர்த்தி பேசும்போதும், சேகரிடம் பெண்களுக்கு கல்வி அவசியமெனச் சொல்லும்பொழுதும் அசத்துகிறார்.

சத்தியராஜின் மகளாக தீக்ஷிதா நடித்துள்ளார். படத்தின் தொடக்கம் முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலே வரும் அந்த பெண், சேகரின் படுக்கையறை வாசலருகே வந்து நிற்கும் அந்த ஒரு கணத்தில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெறும் வண்ணம் கைதட்டல்களை அள்ளுகிறார். உண்மையில், இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள ஆண்டனி பெறும் கைதட்டல்கள் அவை. ஒரு ரீ-மேக் படம் என்ற உணர்வையே கொடுக்காமல், கச்சிதமாக திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கேற்ப மாற்றியுள்ளார்.

படிப்பின் மேன்மையை, அதிலும் குறிப்பாக பெண்கள் படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தினாலும், அறிவுக்கும் படிப்புக்கும் நேரடித் தொடர்புண்டு என்ற விபரீத முடிவை இழையோட விட்டுள்ளனர். ஆனால், நாயகனின் அறிவுக்கண் திறப்பது கல்வியினால் அன்று; அனுபவப் பட்டறிவினாலே தான்! மேலும் கல்வி பொருளாதார மேன்மைக்கானது என்பதையும் பதிய முயற்சி செய்கிறது. மேற்சொன்ன இரண்டுமே உண்மைகள் தானெனினும், பெற்றோர்களும் பள்ளிகளும் இணைந்து அது மட்டுமே உண்மையென மாணவர்கள் மீது தரும் அழுத்தத்திற்கு படம் ஒத்து ஊதாமல் இருந்திருக்கலாம். அறம் சார்ந்த பொதுப் புத்தியின் மதிப்பீடுகளை தூசி தட்டி சுத்தம் செய்வதன் மூலம் இப்படம் தன் வெற்றியை உறுதி செய்து கொள்கிறது.

உப்பு கருவாடு விமர்சனம்

$
0
0

uppu karuvadu vimarsanam

சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மில இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று.

மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து, அவருக்கு இறவாப் புகழ் தேடித் தந்தவர் இயக்குநர் ராதாமோகன். இப்படத்திலும், கவிஞர் நெய்தல் ஜெயராமன எனும் குணசித்திரக் கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். ஒரு காட்சியில் பாஸ்கர் நம் மனதைக் கனக்க வைக்கிறார் என்றாலும், படம் ‘நகைச்சுவை டிராமா’ வகையைச் சேர்ந்தது என்பதால் கதாபாத்திரங்களின் எமோஷ்னல்கள் சட்டென நீர்த்துப் போய் விடுகின்றன. மகாலெட்சுமி எனும் பாத்திரத்திற்கு தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் நந்திதா.

படம், சில காட்சிகளில் தரும் ‘சீரியல் பார்க்கும்’ உணர்வையும் மீறி படத்தோடு ஒன்ற வைப்பது பொன் பார்த்திபன் தான். படத்தின் வசனகர்த்தா இவர். ‘வலி இல்லாதவன் மனிதனே இல்லை’ என்ற சீரியஸ் வசனங்களாகட்டும், Impotent/important, encagement/encouragement போன்ற ஆங்கில வார்த்தைகளைக் கொண்டு உருவாக்கும் வசனங்களாகட்டும், பொன் பார்த்திபன் கலக்கியுள்ளார். அதுவும் தப்பும் தவறுமாக ஆங்கில வார்த்தையை ‘டவுட்’ செந்தில் (டாடி, எனக்கொரு டவுட் நிகழ்ச்சியில் மகனாக வருபவர்) உபயோகிக்கும் காட்சிகள் பெரிதும் ரசிக்க வைக்கின்றன. ஒரு கலைஞரிடம் மாட்டிக் கொண்டு டவுட் செந்தில் படும் அவஸ்தை இன்னும் சூப்பர். அதே தொலைகாட்சி நிகழ்ச்சியில், செந்திலுக்கு தந்தையாக நடிக்கும் சரவணன் இப்படத்தில் சாமியாராக அசத்தியுள்ளார்.

ராதாமோகனின் ‘நான்-லீனியர்’ திரைக்கதை, ஒரு அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிடுகிறது. ஆனால், வசனங்களின் உதவியோடு கிச்சுகிச்சு மூட்டத் தவறவில்லை. சினிமா கனவுகளோடு திரியும் எண்ணற்ற இளம் உதவி இயக்குநர்களின் அன்றாட அவஸ்த்தையை மெல்லிய நகைச்சுவை இழையோட அழுத்தமாகப் பதிந்துள்ளது படம். ‘எல்லாம் நன்மைக்கே, அனைவரும் நல்லவர்கள்’ என படம் முழுமையையும் நிறைவையும் தருகின்ற சுபத்தோடு முடிகிறது.


இஞ்சி இடுப்பழகி விமர்சனம்

$
0
0

Inji idupazhagi vimarsanan

குண்டாய் இருக்கிறார் ஸ்வீட்டி. அதனால் அவரது திருமணம் தள்ளிப் போகிறது. எப்படியாவது தன் மகளின் எடையை, மிகக் குறைந்த நாட்களிலேயே குறைத்து விடவேண்டுமென ‘ஜீரோ சைஸ்’-இல் சேர்க்கிறார் ராஜேஸ்வரி. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.

படம் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே, இது நிறைய தெலுங்குப் படம் கொஞ்சமே கொஞ்சம் மட்டும்தான் தமிழ்ப்படம் என்ற புரிதல் ஏற்பட்டு விடுகிறது. அதாவது க்ளோஸ்-அப் ஷாட்களில் ஒட்டும் கதாபாத்திரங்களின் உதடு, வைட் ஷாட்களில் ஒட்டாமல் போகிறது. ‘இது தமிழ்ப்படமும் தான்’ என்ற லேசான நம்பிக்கையையும், ‘சைஸ் ஜீரோ’ பாடலில் தன் நடனத்தால் சுக்குநாறாக நொறுக்கி விடுகிறார் அநி.

ஸ்வீட்டியான அனுஷ்காவை மட்டுமே மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளனர். அனுஷ்காவும், ஸ்வீட்டி எனும் கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். அதை நமக்கும் கடத்தி விடுகிறார். ஆர்யா முதல் இஞ்சி இடுப்பழகியான சோனல் செளஹன் வரை மற்ற எந்த கதாபாத்திரமும் மனதில் பதியவே இல்லை. ஆனால், தன் அனுபவத்தால் கனமிக்க ஸ்வீட்டியையும் அனாயாசமாக ஓரங்கட்டியுள்ளார் ஊர்வசி. குண்டாக இருக்கும் பெண்ணின் மனநிலையைப் படம் பிரதிபலிக்கத் தவறினாலும், அத்தகைய பெண்ணினுடைய தாயாரின் மனநிலையைத் தெள்ளத் தெளிவாகப் பதிந்துள்ளது.

உடனடி எடைக் குறைப்பு எத்தகைய ஆபத்தானது என்பதை நோக்கி நகரும் கதைக்கு வில்லனாக பிரகாஷ் ராஜைக் கொண்டு வருகின்றனர். பின் படம் தன் வசத்தை இழந்து க்ளைமேக்ஸ் நோக்கி வருகிறது. அங்கேயும் ஒரு ட்விஸ்ட். ‘உங்களால் கதையை யூகிக்க முடியலாம். ஆனால் எப்படி அதைக் காட்சிபடுத்தியுள்ளோம் பாரீர்’ என இழுத்து முடிக்கின்றனர். அவர்களுக்கு அந்த நம்பிக்கையைக் கொடுத்திருப்பது நிரவ் ஷாவின் அற்புதமான ஒளிப்பதிவே!

ஈட்டி விமர்சனம்

$
0
0

ஈட்டி விமர்சனம்

தனது பலவீனத்தை, முறையான பயிற்சியின் மூலமாக எதிர்கொண்டு விருப்பப்பட்ட துறையில் புகழ் சாதிக்கிறானா இல்லையா என்பது தான் கதை.

புகழாக அதர்வா. குறி தப்பாது காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் ஈட்டி போல் அவரது உடம்பு கச்சிதமாக உள்ளது. நாயகன் என்பதால் வென்று விடுவான் என்ற சினிமாத்தனத்தை மீறி, இந்த முயற்சிக்கு வெல்லாமல் எப்படி என்ற உணர்வைத் தருவது தான் அதர்வாவின் வெற்றி. வசன உச்சரிப்பின் போது, கடைசி வார்த்தையைக் கத்தரித்தது போல் பேசுவார். இப்படத்தில், அதர்வாவின் அக்குறையும் கலையப்பட்டுள்ளது. கதாபாத்திரத்திற்கு ஏற்ற நாயகனாய் அனைவரையும் கவர்கிறார்.

சிறந்த துணை நடிகராய்த் தன்னை நிரூபித்து வரும் ஆடுகளம் முருகதாஸை அசட்டுத்தனமான நகைச்சுவைகளுக்குப் பயன்படுத்தியுள்ளார் இயக்குநர் ரவி அரசு. காட்சிகளின் நீளத்தை அதிகரிக்கவே அவர் பயன்பட்டுள்ளார். கதையோடு பொருந்தாமல், துருத்திக் கொண்டிருக்கும் சில காட்சிகளைக் கத்திரித்திருந்தால் விறுவிறுப்பு இன்னும் கூடியிருக்கும். வழக்கம் போல் நாயகனின் தந்தையாக வரும் ஜெயப்ரகாஷும், கோச்சாக வரும் ஆடுகளம் நரேனும் தன் பங்கினைச் செறிவாகச் செய்துள்ளனர். எனினும், நாயகனுக்கும் அவர்களுக்கும் இருக்கும் பிணைப்பினை இன்னும் அழுத்தமாகச் சித்தரித்திருக்கலாம்.

கேட்டுக் கேள்வியின்றி ஓடோடி நாயகனின் மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து விடும் லூசுப் பெண்ணாக ஸ்ரீதிவ்யா. மிஸ்டு கால் அழைப்பால் தொடங்கும் நாயகன் நாயகி பழக்கம், காதலாகப் பரிணமித்த பின், ஸ்ரீதிவ்யா நார்மலாகி ஈர்க்கிறார்.

ஸ்ரீதிவ்யாவின் அண்ணனாக களவாணி படத்து வில்லன் திருமுருகன் நடித்துள்ளார். எல்லா விஷயத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கும் ஒருவருக்கு வீட்டிலேயே மதிப்பு இருக்காது என்பதை இந்தக் கதாபாத்திரத்தின் மூலம் அழகாகச் சித்தரித்துள்ளனர். சாலையில் நின்று கொண்டிருக்கும் அதர்வாவை வீட்டுக்கு அழைக்கும் காட்சியில், நாயகியின் அண்ணன் என்ற மனத்தடையையும் மீறி அவரைப் பிடிக்கத் தொடங்கி விடுகிறது. ;)

பிரமாதப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு. ஓடுகளத்தில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் எல்லாம் அட்டகாசமாய் உள்ளது. நம் கவனத்தை இழுத்து நிறுத்தி, ஆடாமல் அசையாமல் உட்கார வைத்து விடுகிறது. ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு மாறும் பொழுதெல்லாம், ஒரு அழகான தொடர்பை இழைய விட்டுள்ளார் இயக்குநர். அந்தத் தொடர்பை அழகாகக் கொண்டு வந்துள்ளார் படத்தொகுப்பாளர் ராஜா மொஹமத்.

இயக்குநர் ரவி அரசு எறிந்திருக்கும் ஈட்டி தன் இலக்கை எட்டி விட்டது.

பீப் பாடலும் டூப் சீற்றமும்

$
0
0

நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல..
கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல..

குட் பொம்பள எவளுமிங்கில்ல..
ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல..

ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா..
அவளோட ஆச தீர,
உன்ன விலகி ஓடு வா

இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு புடைக்க வருத்தப்பட்டார்.

சிம்புவின் மீதான நாலு பேரின் நாலா விதமான கோபமும், அதன் பின்னாலுள்ள பாசாங்கும் எரிச்சலடைய வைக்கின்றன. விடாமல் துரத்த வேறு செய்கிறது. சிம்புவின் பாடலில் எது அவர்களை கோபமடைய வைக்கிறது? பொருட்குற்றமா? சொற்குற்றமா? பொருட்குற்றமெனில், யுகபாரதியின் மேலேயுள்ள பாடல் முதற் கொண்டு தமிழில் வரும் பெரும்பாலான பாடல்கள் இத்தகைய அருவருப்பான குப்பைகளே!

சொற்குற்றமெனில் அதை விட பாசாங்கானது வேறொன்றுமிருக்காது. எந்தப் பள்ளியின் கழிப்பறைக்கும் வேண்டுமானால் சென்று பாருங்கள், படம் வரைந்து இடம் சுட்டி விளக்கியிருப்பார்கள். பேருந்துகளில், சாலையில், மைதானங்களில், போக்குவரத்து நெரிசல்களில், கல்லூரியில் என நீக்கமற நிறைந்த சொற்கள் அவை. கோவில் திருவிழாக்களின் பொழுது, கூத்து நடக்கும். 99% மகாபாரதக் கூத்துதான். இரவு பத்து மணிக்கு மேல் தொடங்கி, விடிய விடிய நடக்கும். துரியோதனனையும் பீமனையும் பஃபூன் பீப்பின்றி எரிச்சல்படுத்தும் பாங்கை குடும்பத்தோடு சிரித்து மகிழ்வார்கள். குடும்பத்தில் ஐந்து வயது வாண்டு முதல் தொண்டு கிழம் வரை அடக்கம். இடம் பிடிக்க வீட்டிலுள்ள சிறுவர்களிடம் தான் பாய் கொடுத்தனுப்புவார்கள். இதை நாகரீகச் சூழலின் எடுத்துக்காட்டாகப் பாவிக்கலாம். பஃபூனின் வரம்பு மீறிய பீப்-களால் தங்கள் வீட்டு சிறார்களும் விடலைகளும் கெட்டு போய் விடுவார்கள் என்ற பதற்றம் அங்கில்லை. மூடி மறைத்தாலும், இந்தச் சமூகம் எப்படியேனும் அதை எல்லாம் அவர்களிடம் கொண்டு போய் சேர்த்து விடுமென்ற புரிதலும் காரணமாக இருக்கலாம். அந்தக் கூத்தில் உபயோகப்படும் வார்த்தைகளை, அந்தக் குடும்பங்கள் அங்கேயே உதறி விடும். அந்தச் சிறுவர்கள் தங்களுக்குள் குசுகுசுவென்றும், விடலைகள் கொஞ்சம் சத்தமாகத் தங்களுக்குள்ளும், பெரியவர்கள் தங்களுக்குள்ளும் உபயோகித்துக் கொள்வார்கள். அவரவர் எல்லையை உணர்ந்தவர்களாக உள்ளனர் கூத்து பார்த்தவர்கள். கூத்தைக் கூத்தாகப் பார்த்துப் பழகிய நாகரீகச் சமூகத்திற்கு இன்று எதற்குப் பதற்றப்படுவதென்று தெரியாமல் அனைத்துக்கும் பதற்றப்படுகிறது.

பிறப்புறுப்புச் சொற்களைப் பயன்படுத்தவே கூடாதென்ற மனநிலை விக்டோரியன் ஒழுக்கவியல் நமக்களித்த கொடை. அதற்கும் முன்னான தமிழ்ச் சமூகத்திற்கு அத்தகைய பாசாங்கு இல்லை. அவர்கள் தங்கள் படைப்புகளில் எதையும் பேசும் முழுச் சுதந்திரத்தைப் பெற்றவர்களாக இருந்தனர். இன்றும் உண்டு சில கட்டுபாடுகளுடன். சமீபத்திய உதாரணம்: த்ரிஷா இல்லனா நயன்தாரா. அது A செர்ட்டிஃபிகேட் வாங்கிய மட்டமான ஒரு படம். அந்தப் படம், உலக வரலாற்றில் முதன் முறையாக தொலைக்காட்சிகளில் வரப் போவதே இல்லை. 18 வயதுக்கு மேலானவர்கள் மட்டுமே திரையரங்கில் பார்த்திருக்கக்கூடும் (கூட்டம் கூட்டமாய்ப் பார்த்த பள்ளி மாணவர்களைத் தடுக்காதது திரையரங்கத்தின் பிழை. படத்தை எடுத்தவர்களின் பிழையன்று). அந்தப் படம் இளைஞர்களைக் கெடுக்கிறதென குறை சொல்கின்றனர். 18 வயதாகியும், ஒருவன் இது போன்ற அரைகுறைப் படைப்புகளால் பாதிக்கப்படுகிறான் என்பது சமூகத்தின் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. அதை சரி செய்யப் பார்க்காமல், படைப்பாளிக்கு எல்லை வகுக்கும் செயலைச் செய்வது பாசாங்கின்றி வேறென்ன? கூனிக் குறுக வேண்டிய பாசாங்கிற்காக கவலை கொள்ளாமல், அதை அறச் சீற்றமாக வெளிபடுத்துகிறார்கள். அவற்றில் ஆகச் சிறந்த போலி அறச்சீற்றமாக, படைப்பாளிகளின் குடும்பத்தாரை அதிலும் குறிப்பாக பெண்களை இழுத்த நிர்மலா கொற்றவையினுடையதைச் சொல்லலாம்.

நான் பெண். ஆணின் பெண் அல்ல - கொற்றவை

ஆனால், இந்தச் சலுகை பெண்ணியவாதியான அவருக்கும், அவர் குரல் கொடுக்க விரும்பும் பெண்களுக்கே மட்டுமே உரித்தானது போலும். சாதிய அடுக்குகளிலும் பொருளாதாரத்திலும் உயர்நிலையில் இருக்கும் பெண்கள், குறிப்பாக கலைத்துறையில் இயங்கும் பெண்கள், புகழின் உச்சியில் இருக்கும் ஆணின் குடும்பப் பெண்கள் எல்லாம் ஆணின் பெண்களே! மகனின் தாயாக, சகோதரனின் உடன்பிறந்தவளாக, அத்தையின் மருமகனாகப் பாவித்து, அப்பெண்களை குடும்பச் சட்டகத்துக்குள் அடைத்து, விமர்சிக்கிறேன் கண்டிக்கிறேன் (!? – பெண்ணாகப் பிறந்ததற்கு கண்டிக்கிறாரோ?) என்ற பெயரில் பெண்ணியவாதி கொற்றவை மிகவும் கொதித்துப் போயுள்ளார். அதாவது எல்லாப் பெண்களும் பெண்களல்லர் என்பதே கொற்றவை கண்டெடுத்த பெண்ணியம். சிம்புக்கும் கொற்றவைக்கும் தான் இதில் எத்தனை ஒற்றுமை? ‘எல்லாப் பெண்களும் பெண்களல்லர்.. ஒருவனை மட்டுமே தன் வாழ்நாளில் காதலித்து, அவனுக்கு மட்டுமே விசுவாசமாய் அடங்கி இருப்பவளே பெண்’ என்கிறார் சிம்பு. தங்கள் பார்வையில் பெண்கள் அல்லாதவர்களை அசிங்கப்படுத்திக் கொள்ளலாம். சிம்புவாவது தன் ஆற்றாமையையும் புரிதலின்மையையும் பொதுப் படைப்பாக்கிச் சாடித் தீர்த்துக் கொண்டுள்ளார். பெண்ணியம் பேசும் கொற்றவையோ அத்தகைய குறைந்தபட்ச கேடயம் கூடத் தேவையின்றி, நேரடியாக பெண்கள் மீது சேறு வாரி இறைத்துள்ளார். ஆனால், நான் படைப்பைத்தானே விமர்சிக்கிறேன்; கண்டிக்கிறேன் எனப் பூசி மெழுகுகிறார். சிம்புவின் அந்தப் பாடல் கேவலமானது என்பது விமர்சனம்; அதன் உட்பொருள் வன்மமானது என்பது கண்டனம். அவர்கள் வீட்டுப் பெண்களைக் குற்றவாளியாக்குவது ஆணாதிக்க வக்கிர மனோபாவம்.

பயாஸ்கோப் காலத்திற்கு முன்பிருந்தே, இது போன்ற அபத்தமான பாடல்களால் பொதுவெளியில் நடமாடும் பெண்கள் சீண்டப்பட்டே வந்துள்ளனர். அதையும் மீறி, வெளியில் வரும் பெண்களை முடக்கி விட, விடலைப் பசங்களும் கொற்றவை போன்றோரும் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறார்கள். அப்படி முடக்கிப் பார்க்க அவர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.

பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா

- பாரதி

மூடிக்கிட்டுப் போ

தங்கமகன் விமர்சனம்

$
0
0

Thangamagan tamil vimarsanam

தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை.

ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். ‘ஹீரோ ஃப்ரெண்ட்’ ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய  மாற்றம் பொருந்தவில்லை.

மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதாபாத்திரமாக மனதில் பதிகிறார். அதாவது மற்ற கதாபாத்திரங்களைச் சுலபமாக தனுஷ் ஓவர்-டேக் செய்து விடுகிறார். அநேகமாய் ஜெயப்ரகாஷ் மட்டுமே விதிவிலக்காக மனதில் பதிகிறார்.

காதலிக்காக நண்பனையும், பெற்றோர்களுக்காகக் காதலியையும் நாயகன் பிரிகிறான். தன் நண்பன் தன்னை விட அழகாக இருக்கிறான் என்ற நாயகனின் தாழ்வுணர்ச்சியே, முன்னதுக்கான காரணம். இங்கெழும் பொஸிசவ்னெஸைப் புரிந்து கொள்ள முடிந்தாலும், நண்பனும் உறவினனுமான ஆதித்தை (‘இனிது இனிது’ படத்தின் நாயகன்) வில்லனாகச் சித்தரிக்க வேண்டி, ‘சிறந்தது எல்லாம் ஏன் உனக்கே கிடைக்கணும்?’ என்ற அவரது மனமாற்றம் தான் வலிந்து திணித்ததாகத் தெரிகிறது. படத்தின் பெயரை அழுத்தமாக வலியுறுத்த, நாயகன் தன் காதலியின் கோரிக்கையை நாயக முறுக்கோடு மறுக்கிறான். ஒரு பதுமையாய் வந்து போகாமல், எமிக்கு நடிக்கவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது திரைக்கதை.

எமி தனுஷ்இல்லத்தரசி யமுனாவாக சமந்தா. கணவனே வாழ்க்கையின் பெரும்பேறு; பாதுகாப்பை அளிப்பவன் என நினைக்கும் மெகா சீரியல் நாயகி பாத்திரம். ஒரு கட்டத்தில், சமந்தாவும் எமி ஜாக்சனும் கோயிலில் சந்தித்துக் கட்டிப் பிடித்து அழாத குறையாக கண்ணீர் வடிக்கும் போது மெகா சீரியல் தான் பார்க்கிறோமோ என ஒரு கணம் குழப்பம் நேருகிறது (அதனாலென்ன ஹீரோயின்களில் ஒருவரைக் கூட லூசுத்தனமாகச் சித்தரிக்காததற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்தானே!). இப்படித் தொய்வுறும் காட்சிகள் எல்லாம், நான் இருக்கேன் ஆபத்பாந்தவனாய் என அனிருத் தன்னிருப்பை வெளிபடுத்திய வண்ணமே உள்ளார். முதல் காட்சிகளில் இத்தகைய சீரியல் தன்மை தோன்றாத அளவு நெருக்கமாக ஒருவரை ஒருவர் நெறுக்கிக் காதலிக்கின்றனர் ஹேமாவும் தமிழும்.

சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் பிறர் பணத்தைக் குற்றவுணர்வின்றிக் கவர நினைக்கும் மனித மனத்தையும், அதன் கசடுகளையும் கதாபாத்திரங்கள் வாயிலாகக் கோடிட்டுக் காட்டுகிறார் இயக்குநர் வேல்ராஜ். எனினும் அதற்கான அழுத்தங்களைக் காட்சிகளில் வைக்காமல், நாயகனின் சாகசத்திற்கான காரணிகளாக அவற்றைக் கடந்து விடுகிறார். அவரது முந்தைய படத்தைப் போலவே, வில்லனைப் பழி வாங்குறேன் பேர்வழியென நாயகனை வன்முறையில் இறக்காததற்காக வேல்ராஜை எவ்வளவு மெச்சினாலும் தகும்.

படத்தில் ஒரு துள்ளல்தன்மை இருந்தாலும், எல்லாக் காட்சிகளுமே யூகிக்க முடிந்ததாகவும் பலமுறை பார்த்துப் பழகியதாகவும் உள்ளது ஒரு குறை. ஒரு நடுத்தரக் குடும்பம் வசிக்கும் வீட்டில், புதிதாய் திருமணமாகி இருக்கும் தம்பதிக்கு எத்தகைய சங்கடங்கள் ஏற்படுமெனப் பதிந்துள்ளார் இயக்குநர். “என்னப்பா இவ்ளோ சீக்கிரம் ஊர்ல இருந்து வந்துட்ட?” என்ற கேள்வி, வேதனை கலந்த நகைச்சுவையாகும். வசனங்கள் ஆங்காங்கே இப்படிக் கிச்சுகிச்சு மூட்டிய வண்ணமுள்ளது.

பீர் குடித்து போதை ஏறிய எமி ஜாக்சன், “நீ பார்க்க சுமாரா தானிருக்க” என தங்கமகனைப் பார்த்துச் சொல்வார். போதையில் யாராவது பொய் சொல்வார்களா?

சந்திரஹாசம் –ஓர் அலசல்

$
0
0

Chandrahaasam Vimarsanam

அதென்ன சந்திரஹாசம்? சட்டென ஈர்க்காத இந்தத் தலைப்பை ஏன் விகடன் கிராஃபிக்ஸ் தேர்ந்தெடுத்தனர்? சந்திரஹாசம் என்பது பாண்டியர்களுடைய வீர வாளின் பெயர் (இது சந்திரஹாசம் இணையத்தள முன்னுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டிருந்தது).

ச்சல்.. சல்புத்தகத்தின் ஆரம்பப் பக்கங்களே ஏமாற்றத்தைத் தருகின்றன. ‘இது தான் குளியலறை. இங்கே குளிப்பார்கள்’ என குளியலறை காட்டி யாராவது சொன்னால் உங்களுக்கு எப்படியிருக்கும்? அப்படித்தான் சித்திரங்களுக்கு விளக்கவுரை போட்டு ஓவியர், வாசகர் என இருவரையும் அவமானப்படுத்துக்கிறார்கள். அதை விட கொடுமை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வீங்கிய எழுத்துரு. உதாரணத்திற்கு, குதிரையின் குளம்புகளை மறைத்து “சல்.. சல்..” எனப் பெரிய எழுத்துகளில் போடப்பட்டிருப்பதைக் காணுங்கள். க்ர்ர்..

இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அப்படியே காலம் நழுவி பால்யத்துக்குள் நம்மைத் தள்ளி விடுகிறது. ‘சிங்கம் கர்ஜிக்கும்; யானை பிளிறும்; காகம் கரையும்’ என்று தமிழ் மிஸ்ஸின் குரல் காதில் கேட்கிறது.

புத்தக அறிவிப்பின் பொழுதே கதையையும், புத்தகத்துக்குள் ஒரு சினிமா என்றும் சொல்லியே விளம்பரப்படுத்தியிருந்தனர். இலங்கைப் போர், அங்குசம், நாகரிகத்தின் முகம், மணிமுடி, மாபாதகம், மனிதக்கடல் என மொத்தம் ஆறு அத்தியாயங்கள். புனைவென்ற ரீதியில் கவர்வது ‘அங்குசம்’ அத்தியாயம் மட்டுமே! அதிலுள்ள அரசியல் விளையாட்டுகள் ஈர்க்கிறது. ‘நாகரிகத்தின் முகம்’ என்ற அத்தியாயம் எல்லாம் பக்கத்தை நிரப்பும் ஒப்பேத்தலின் உச்சம். குப்ளாக்கானின் (ஓரிடத்தில் குப்ளாகான்) தூதுவராக மார்கோபோலோ பாண்டிய நாட்டுக்கு வந்தார் என்ற தகவலைச் சொல்லும் அத்தியாயம் அது. ஆனால் அதே தகவல், அதற்கு முன்பாக ‘அங்குசம்’ உபத்தலைப்பு இடம்பெற்றிருக்கும் பக்கத்திலுள்ள, அரக்கால் கயல் முத்திரை இடப்பட்ட ஓலையிலும் உள்ளது.

அங்குசம்

இந்த ஓவியத்தையும் ரசிக்க முடியாமல் ஓலையை ஓவியத்தின் மேல் ஒட்டியுள்ளனர். ஓட்டியவர்கள் ஓவியத்தின் எதிர்பக்கமாவது ஒட்டியிருக்கலாம். முதல் மூன்று உபத்தலைப்பு வரும் பக்கங்களிலும் இதே எரிச்சலூட்டும் கதைதான். ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்கான எழுத்துரு, எளிதாய்ப் புரியக் கூடியதற்கும் கட்டம்கட்டி விளக்கம் சொல்வதென ஏதோ ஒரு வகையில் ஓவியத்திற்கான முக்கியத்துவதை இரண்டாம் பட்சமாக்கி விடுகின்றனர்.

போர்க்களச் சித்திரங்கள், ஐவகை நில அமைப்பின் சித்திரங்கள், பறவையின் கோணத்தில் வரையப்பட்ட அனைத்துச் சித்திரங்களையும் பிரமாதப்படுத்தியுள்ளார் ஓவியர் க.பாலசண்முகம். ஆனால் மனித முகங்களும், முகப் பாவனைகளும் தான் அவருக்கு வரவே இல்லை. எந்தக் கண்களிலுமே உணர்ச்சிகளைக் காண முடியவில்லை. எவரின் முகமும் நினைவில் நிற்கவில்லை. இவ்வளவு ஏன் ஐரோப்பியரான மார்கோ போலோவே மாறவர்மனின் ஜாடையில் தான் இருக்கார். அரிவாள் மீசை என்றால் வீரபாண்டியன், தொங்கு மீசை என்றால் சுந்தரபாண்டியன், நரைத்த முடியும் தாடியும் இருந்தால் மாறவர்மன் குலசேகர பாண்டியன், தலைப்பாகை கட்டி கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் மார்கோ போலோ என்று பொருள். அதே போல், நெற்றியில் பொட்டு வைத்திருந்தால் சிவச்சாரியார்கள், பொட்டு இல்லையெனில் பெளத்த குருமார்கள். அப்படியும் வாசகர்களுக்கு குழப்பம் நேர்ந்து விட்டால் என்ன செய்வதென்று ஆங்காங்கே கட்டம் கட்டி இவர் தான் இன்னாரெனத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றனர்.

ஜலக் கிரீடை சித்திரங்கள் எல்லாமும் கூட உண்டு. அதெல்லாம் ஒப்பேத்தும் அத்தியாயங்களின் பக்க நிரப்பிகள். ஆனால் அதையும் மிக நுண்ணுர்வுடன் காட்சிபடுத்தியுள்ளதால், இது ‘உலக கிராஃபிக் நாவல்’ ஆகிறது. அந்தக் குறியீடு என்னவெனில், வீரபாண்டியன் தன் மனைவி சித்ராதேவியைத் தூக்கிக் கொண்டு செல்கிறான். எரிந்து கொண்டிருக்கும் விளக்கு அணைகிறது. “யுத்தத்தின் காயங்கள் மெல்ல கரையத் துவங்கின” என அதற்கு கட்டம் கட்டி விளக்கமளித்துள்ளனர். அரசவை, படுக்கையறை, நீராழி மாளிகை என அனைத்து இடங்களிலும் சித்ரா தேவிக்கு ஒரே சிற்றுடைதான். வண்ணங்கள் மட்டுமே மாறுகிறது. காமிக்ஸிலுமா கதாநாயகிகளுக்கு இந்நிலை?

ஃப்ரான்க் மில்லரின் 300 கிராஃபிக் நாவலில் இருந்து நிறைய ஈர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. திறந்த வாய்க்குள் ஈட்டி பாய்வது, கொய்யப்பட்ட தலைகள் அடுக்கப்பட்டிருப்பது, தாக்க வரும் புலியை வீரபாண்டியன் எதிர்கொள்வது முதலிய சித்திரங்களில் அதைக் காணலாம். வாளோர் மரபு பற்றியும், கடமை தவறிய ஆபத்துதவிகள் பற்றியும், சு.வெங்கடேசன் தரும் குறிப்புகள் ஆச்சரியப்பட வைக்கின்றன.

மிக நேர்த்தியான பேக்கிங்கில் இருக்கும் சந்திரஹாசத்தை கையில் எடுத்ததும் பெறும் உணர்வினை விவரிக்கவே முடியாது. அவ்வளவு அற்புதமான கண்ணையும் மனதையும் கொள்ளை கொள்ளும் அட்டைப்படம். அட்டையில் பொறிக்கப்பட்டிருக்கும் தலைப்பைத் தடவிப் பார்ப்பதில் தான் எத்தனை ஆனந்தம்? அதே போல் ‘மனிதக் கடல்’ என்ற அத்தியாயத்தின் உபத்தலைப்பு வரும் ஓவியமும், அதைத் தொடர்ந்து வரும் பெரும் சேனையின் சித்திரங்களும் அட்டகாசம். குறிப்பாக கடைசிப் பக்கத்தில் வரும் வீரபாண்டியனின் நிழல் சித்திரம் மிகக் கம்பீரமாகவும் அற்புதமாகவும் உள்ளது.

ஏ4 அளவினை விட, இப்புத்தகம் சுமார் 2.4 செ.மீ x 1.6 செ.மீ. அளவு அதிகம் என்பது ஒரு சின்னஞ்சிறு ஆறுதல். பேஜ் மார்க்கராக கொடுக்கப்பட்டிருக்கும் சந்திரஹாசம் வாளும் உரையும் நன்றாக உள்ளது. ஆனால், இது முதல் பாகம் மட்டும்தானாம். அடுத்த பாகமான ‘மதுரா வியூகம்’ விரைவிலாம். இந்தப் பாகத்தின் பெயர் ‘சகோதர யுத்தம்’. ஒரு முழுமையை அளித்திடாமல் சட்டென முடிந்து விடுகிறது. பக்க எண்களும் கொடுக்கப்படவில்லை. இந்த கிராஃபிக் நாவல் ஒரு நல்ல தொடக்கம் தான் எனினும், 150 பக்கங்களிற்கும் (144 பக்கங்கள் + 2 அட்டைப்பக்கங்கள்) குறைவான இந்தப் புத்தகத்திற்கு 1500/- எனும் விலை ரொம்பவே அதிகம்.

Viewing all 1647 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>