Quantcast
Channel: இது தமிழ்
Viewing all 1647 articles
Browse latest View live

கவியோகி சுத்தானந்த பாரதியார்

$
0
0

மாயலோகத்தில்..

கவியோகி சுத்தானந்த பாரதியார்

1958இல் நாகர்கோவிலில் தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடைபெற்றது. எழுத்தாளர்கள் பதாகையெல்லாம் பிடித்துக் கொண்டு, கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தார்கள். அவர்கள் மத்தியில் காவி உடையணிந்து, தலையில் காவித்துணி முண்டாசுடன் கூடிய, நரைத்த தாடியுடன் கூடிய தோற்றத்தில் ஒருவரும் நடந்து வந்தார். அவரைப் பார்த்ததும் இவருக்கு இங்கு என்ன வேலை என்று தான் தோன்றிற்று. அவர் யார் என்பதுவும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

நல்ல வேளையாக எனதருகிலேயே ஒரு தமிழ் எழுத்தாளர் வசித்து வந்தார். அவரிடம் இவரைப் பற்றிக் கேட்டுவிட வேண்டியது தான் என்று தீர்மானித்தேன். எழுத்தாளரை உடனடியாகச் சந்திக்க இயலவில்லை. மறுநாள் காலையில் தான் பார்க்க முடிந்தது.

எனது சந்தேகத்தைக் கேட்டேன். அவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்று மட்டுமே முதலில் கூறினார். பெயரைக் கூடத் தெரிவிக்கவில்லை. என்னிடம் விளையாட வேண்டும் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ?!

‘நீ பாட்டு கேட்கும் வழக்கம் எல்லாம் உண்டா?’ எனக் கேட்டார்.

‘கேட்பேன்’ என்று கூறினேன்.

‘யார், யார்? பாட்டெல்லாம் கேட்பாய்’?

‘எல்லோர் பாட்டையும் கேட்பேன். சினிமாப்பாட்டு, கர்நாடக சங்கீதம் எல்லாம் எனக்குப் பிடிக்குமே’.

‘டி.கே. பட்டம்மாள் கேட்டிருக்கிறாயா?’

‘ஓ, கேட்டிருக்கிறேன்’.

‘அவர் பாடிய பிரபலமான பாட்டு ஒன்று சொல்லு’.

தீராத விளையாட்டுப் பிள்ளை‘.

‘இது பாரதியார் பாட்டு. இன்னொன்று சொல்லு’.

தூண்டிற் புழுவினைப் போல்‘.

‘இதுவும் பாரதியார் பாட்டுத் தான்’.

சற்று நேரம் யோசிக்கலானேன். எழுத்தாளர் காத்துக் கொண்டிருந்தார்.

சட்டென வேறொரு பாட்டு நினைவிற்கு வந்தது.

எப்படிப் பாடினரோ – அடியார்
அப்படிப்பாட நான்

‘வெரிகுட். இந்தப் பாட்டை இயற்றியது யாரென்று தெரியுமா?’

உதட்டைப் பிதுக்கினேன்.

‘இந்தப் பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார். கவியோகி சுத்தானந்த பாரதியார் என்றால் மிகவும் பிரசித்தம். அவரைத்தான் நேற்று நீ ஊர்வலத்தில் பார்த்தாய்’.

தொடர்ந்து, ‘நீதான் நிறைய சினிமாவெல்லாம் பார்ப்பாயே. ‘ஏழை படும் பாடு’ சினிமா பார்த்திருக்கிறாயா?’

‘அருமையான படம், பார்த்திருக்கிறேனே’.

‘அந்தக் கதை பிரஞ்சு நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ எழுதிய ‘லே மிசரபிள்’ என்கிற நாவல். அதைத் தமிழாக்கம் செய்தவர் இந்த சுத்தானந்த பாரதியார்’ என்றவுடன் எனக்கு அந்த யோகியின் பால் பிரமிப்பும், மரியாதையும் கூடியது.

‘அவர் நிறைய எழுதியிருக்கிறார். அவையெல்லாம் கணக்கில் அடங்காது. நீ, வரும் நாட்களில் அவரைப் பற்றி நிறைய படி. அப்போது உனக்கு அவரைப் பற்றி விவரமாகப் புரிய வரும்’ என்று அந்த எழுத்தாளர் எனக்கு உபதேசம் செய்தார். அப்போது எனக்கு வயது 17.

பிறகு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரைப் படித்துத் தெரிந்து கொள்ள தலைப்பட்டேன். முழுத் தகவலும் ஒரே நேரத்தில் கிடைக்காததால் அவ்வப்போது சிறிய சிறிய செய்திகளாகவே அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது.

சுத்தானந்த பாரதி பிறந்த ஊர் சிவகங்கை. பிறந்த வருடம் 1897. இவரது இயற்பெயர் வேங்கட சுப்ரமணியம்.

சிறு வயதிலேயே தனது தந்தை மூலமாகத் தமிழ் கற்றிருக்கிறார். சிறுவயதில் சிதம்பரம் நடராஜப் பெருமாளை வழிபடப்போன இடத்தில் இயற்றிய பாடல் தான்.

எப்படிப் பாடினரோ – அடியார்
அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

என்று தொடங்கும் பாடல். இப்பாடல் டி.கே. பட்டம்மாள் அவர்களால் பாடப்பட்டு இசைத்தட்டாக அக்காலத்தில் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்தது.

சுத்தானந்த பாரதிக்கு அனேக மொழிகள் தெரிந்திருக்கிறது. ஹிந்தி, ஆங்கிலம், பிரஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறார். சுத்தானந்த பாரதி தமது ஆவேசப் பாடல்கள் மூலம் ஆன்மீகப் புரட்சியை முன் வைத்தார்.

வீரத் தமிழர்களுக்கு ஆவேசக் கடிதங்கள்‘ என்ற நூல் அறுபது அல்லது எழுபது ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. சாதி உணர்வுகளை எதிர்த்துச் சாடிய பெருமையும் உண்டு.

ஆரம்ப காலங்களில் ‘சமரச போதினி‘ எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பிலிருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் பேரியக்கத்தில் ஈடுபட்டு தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். அப்போதுதான் ‘ஸ்வராஜ்யா‘ என்கிற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்க வேண்டியதாயிற்று.

தேசபக்தர், வீரச் செம்மல் வ.வே.சு. ஐயர், ‘பாலபாரதி’ என்றொரு பத்திரிகை நடத்தினார். அதில் அவருடன் இணைந்து பணியாற்றினார் சுத்தானந்த பாரதி.

அந்தக் காலத்தில் மெத்தப்படித்தவர்கள், அறிவு ஜீவிகள் படிக்கும் பத்திரிகையாக வை. கோவிந்தன் நடத்திய ‘சக்தி‘ பத்திரிகையைச் சொல்வார்கள். ஆரம்பகால ‘சக்தி’யில் சில காலம் கவியோகி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.

இல்லையென்பான் யாரடா – என் அப்பனைப்போய்
தில்லையிலே பாரடா

மிகவும் பிரபலமான இசைத்தட்டு. மக்களால் மிகவும் விரும்பிக் கேட்கப்பட்டது. இம்மாதிரி ஏராளமான தனித் தமிழ்ப்பாடல்களை இயற்றி இசையுலகில் தமிழ்த் தொண்டாற்றிய பெருமைக்குரியவர்.

இதேபோல் மிகவும் பிரபலமான இன்னுமொரு தமிழ்ப்பாட்டு :

அருள் புரிவாய் கருணைக் கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே – அருள்

சுத்தானந்த பாரதியார், அரவிந்தர், ரமண மகரிஷி, மகாகவி சுப்ரமணிய பாரதியார் போன்றோருடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

கவியோகி ஏராளமான நூல்கள் இயற்றியிருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. என்றாலும் யோகசித்தி, கீதாயோகம், பாரத சக்தி மகா காவியம் போன்றவை மிகவும் முக்கியமானவை.

பாரத சக்தி மகா காவியத்திற்காக, கவியோகிக்கு ராஜராஜ சோழன் விருது கிடைத்திருக்கிறது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துப் பெயர் பெற்றவர் பாரதி.

இவர் திரைத்துறையையும் விட்டு வைக்கவில்லை. 1948இல் வெளிவந்த “ஸ்ரீ ஆண்டாள்” என்கிற படத்தில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

1949இல் பி.யூ. சின்னப்பா நடித்த ‘கிருஷ்ண பக்தி’ என்றொரு படம் வெளிவந்தது. இப்படத்தில் கதை ‘THE MONK’ என்கிற பிரஞ்சு நாவலின் தழுவல். இக்கதையை தமிழில் மொழியாக்கம் செய்தவர் சுத்தானந்த பாரதி.

1950இல் வெளிவந்த ‘ஏழை படும் பாடு’ திரைப்படம் மிகவும் பாராட்டுதல்களைப் பெற்ற படம். பிரஞ்சு நாவலாசிரியரான விக்டர் ஹியூகோவின் ‘லே மிசரபிள்’ என்கிற நாவலைத் தமிழாக்கம் செய்து ‘ஏழை படும் பாடு’ என்கிற நாவலை எழுதியவர் பாரதி. இப்படத்தில் வி. நாகையா மிகவும் அருமையாக நடித்திருந்தார். ‘ஜாவர் சீதாராமனுக்கு ‘ஜாவர்’ பட்டம் ஏற்படக் காரணமாக அமைந்த படம் இது.

மேலும், போஜன், மரகதம், பொன் வயல், சுதர்சனம் போன்ற படங்களில் இவரது பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

சீர்காழி கோவிந்தராஜனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய படம் ‘பொன்வயல்’. இந்தப் படத்தில் ‘சிரிப்புத்தான் வருகுதையா‘ என்கிற பாடல் மூலம் சீர்காழி அறிமுகமானார். இந்தப் பாடலை இயற்றியவர் யோகியார்.

‘சுதர்சனம்’ என்கிற படத்தில் பி.யூ. சின்னப்பா இவர் எழுதிய அருமையான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.

உன்னடியில் அன்பு வைத்தேன்,
கண்ண பரமாத்மா

என்கிற அப்பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல்.

அதேபோல், ‘மரகதம்’ என்கிற சிவாஜி, பத்மினி நடித்த படம் ‘கருங்குயில் குன்றத்துக் கொலை’ என்கிற துப்பறியும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம். கோயம்புத்தூர் பட்சிராஜா பிலிம்ஸ் தயாரித்து வெற்றியடைந்த படம். இந்தப் படத்தில் ஒரு அருமையான பாட்டிற்கு வெகு நேர்த்தியாக நடனமாடியிருந்தார் பத்மினி.

மாலை மயங்குகின்ற நேரம் – பச்சை
மலை வளரும் அருவியோரம்

என்கிற இந்த அற்புதமான பாடலை இயற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்.

அடையாறில், ‘யோக சமாஜம்’ என்கிற அமைப்பை வெகுகாலம் நடத்தி வந்தார். கவியோகி 1990இல் இறைவனடி சேர்ந்தார்.

- கிருஷ்ணன் வெங்கடாசலம்


வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் விமர்சனம்

$
0
0

Vellaiya Irukiravan Poi Solla Maatan Vimarsanam

தனது தந்தையின் மருத்துவச் செலவுக்கு கந்து வட்டியில் பணம் வாங்குகிறான் கார்த்திக். பணத்தை கெடுவுக்குள் கட்டாததால் கந்துவட்டிக்காரனால் மிரட்டப்படும் கார்த்திக், பணத்துக்காக என்ன செய்கிறான் என்றும், அதன் சங்கிலித் தொடர் விளைவுகளாக என்ன நேர்கிறது என்பதும்தான் படத்தின் கதை.

படத்தின் தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. எப்படியாவது ரசிகர்களை ஈர்த்து விட வேண்டுமென வைத்த தலைப்பு போலும்! மூன்று மாதத்தில் பணத்தைத் திருப்பித் தருகிறேன் என்று சொன்ன கார்த்திக்கிடம், “வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என நினைச்சேன். ஏமாத்திட்டியே!” என்கிறான் கந்துவட்டிக்காரன் படம் தொடக்கத்திலேயே. இந்த வசனம் தான் படத்துக்கும் தலைப்புக்குமான ஒரே தொடர்பு. ஆனால் நாயகன் அவ்ளோ வெள்ளையும் கூடக் கிடையாது.

படத்தில் இரண்டு கதைகள் ஒரு புள்ளிகள் ஒன்று சேர்கின்றன. ஒன்று, தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான பாசம்; மற்றொன்று, அதிகாரமும் பண பலமும் மிக்க பெரியவரின் தேடல். தன் வரை நீண்ட சங்கிலித் தொடர் ப்ளாக்-மெயிலின் ஆரம்பப் புள்ளி யாரென்றும், ஏனென்றும் அறிய விரும்புகிறார். மேலிருந்து கீழாக பெரியவர் துப்புத் துலக்குவதில் ஒன்றை அறிகிறார். சங்கிலியின் மேல் பக்கமுள்ள உச்சநீதி மன்ற வக்கீல், ஐ.ஏ.எஸ். அதிகாரி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி, கட்டட கான்ட்ராக்டர் ஆகியோர் தாங்கள் ப்ளாக்-மெயில் செய்யப்படுவதிலும் ஆதாயம் தேட நினைக்கிறார்கள். சங்கிலியின் கீழ் பக்கம் உள்ளவர்களோ, தனக்கென எதுவும் வேண்டாதவர்களாக உள்ளனர்.

பெரியவராக ஆடுகளம் நரேன். பொருந்தா ‘விக்’குடன் அவர் வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லையெனினும், க்ளைமேக்ஸில் ஜெயப்ரகாஷுடன் அவர் பேசும் வசனங்கள் அருமையாக உள்ளன. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் ஜெயப்ரகாஷ், வழக்கம் போல் தந்தை கதாபாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார். கதாநாயகி பூஜாவாக ஷாலினி வட்னிகட்டி நடித்துள்ளார். கதாபாத்திரங்கள் அனைவரையுமே எதார்த்தமாகப் படைத்துள்ளார் எழுதி இயக்கியுள்ள A.L.அபிநிந்திரன். பணம் கேட்டு வருபவர்களை, ஆங்கிலம் பேசி விரட்டும் கான்ட்ராக்டர்களான 5 ஸ்டார் கிருஷ்ணாவும், T.M.கார்த்தியும் (‘நேற்று இன்று நாளை’ படத்தில் வரும் பார்த்தா) கலகலக்க வைக்கின்றனர்.

படத்தின் இன்னொரு விடயம், அபிநிந்திரனின் பிரதான கதாபாத்திரங்கள் அனைவரிடமுமே ஒரு விசேஷக் குணமுள்ளது. ஒருவருக்கு ஒருவர் நேசமாக இருப்பதோடு, தங்களுக்குள் எந்த ரகசியமும் வைத்துக் கொள்ளாமல் மனம் திறந்து பேசுபவராக உள்ளனர். ஒருவரைப் பிடிக்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காத வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார் பழனி (இவர் பொன்னியின் செல்வன் மேடை நாடகத்தில் பார்த்திபேந்திர பல்லவராக நடித்தவரென்பது குறிப்பிடத்தக்கது).

நாயகனின் நண்பனாக வருகிறார் பாலசரவணன். நண்பருக்காக, தெரிந்தவருக்காக, நன்றிக்கடனுக்காக என அனைவருக்குமே ப்ளாக்-மெயில் செய்ய உதவுகிறார். அதாவது யாரை ப்ளாக்-மெயில் செய்கிறாரே, அவருக்கே மற்றொருவரை ப்ளாக்-மெயில் செய்ய உதவுகிறார்.இப்படிக் கதையில் சின்னஞ்சிற் சுவாரசியங்கள் ஏராளம். ஆக, முதலில் அந்நியமாகத் தோன்றும் நாயகன் பிரவீன் குமார், கதையின் போக்கால் மெல்ல பரீட்சயமானவராகி விடுகிறார். தொய்வில்லாமல் படத்தை ரசிக்க ஆண்டனியின் படத்தொகுப்பு உதவுகிறது.

படத்தின் கருவிற்கு, நெருக்கமானதொரு தலைப்பினைச் சூடியிருக்கலாம் படக்குழு. ஏனெனில், ‘நேசத்திற்குரிய ஓர் உறவினை அருகில் கொண்டிருப்பது பெருங்கொடுப்பிணை’ என அழுத்தமாகச் சொல்கிறது படம்.

பசங்க – 2 விமர்சனம்

$
0
0

Pasanga-2 Vimarsanam

தன்னைத் தானே அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தான் பெற்ற குழந்தைகளையும் மன அழுத்தத்திற்குத் தள்ளும் பெற்றோர்களுக்கான படமிது. தங்கள் உலகத்திற்குள் சிறுவர்களை இழுக்க நினைக்கும் பெற்றோர்களிடம், குழந்தைகள் உலகத்தை அறிமுகம் செய்கிறது பசங்க-2.

நற்சாந்துபட்டியில், ஒரு விளையாட்டு மைதானத்தில் படம் தொடங்குகிறது. அங்கேயே படம் முடிந்தும் விடுகிறது. அக்காட்சியில் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மூலம் பேசத் தொடங்கும் பாண்டிராஜ், படம் முழுவதும் பெற்றோர்களிடம் தொடர்ந்து உரையாடிக் கொண்டேயிருக்கிறார்.

சிறுவன் நிஷேஷும், சிறுமி வைஷ்ணவியும் அதகளப்படுத்தியுள்ளனர். கத்தி மேல் நடந்திருக்கும் பாண்டிராஜைப் பத்திரமாக கரை சேர்த்துள்ளனர். இச்சிறுவர்கள் மட்டுமல்ல, மருத்துவர் தமிழ் நாடனாக வரும் சூர்யா, ஆசிரியை வெண்பாவாக வரும் அழகான அமலா பால், கவினின் பெற்றோர்களாக வரும் ராம்தாஸும் வித்யாவும், நயனாவின் பெற்றோர்களாக வரும் கார்த்தி குமாரும் பிந்து மாதவியும், சூர்யாவிடம் கம்பவுண்டராகப் பணி புரிபவர், வெவ்வேறு பள்ளிகளின் வகுப்பறையில் இருக்கும் கவின், நயனாவின் வகுப்பு மாணவர்கள் ஆகிய அனைவருமே கனக் கச்சிதமாக தன் பாத்திரங்களில் பொருந்தியுள்ளனர். ராமதாஸை, முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த் என்றால் தான் உடனே நினைவுக்கு வரும். க்ளெப்டோமேனியா குறைபாடுள்ளவராக வரும் அவரது கதாபாத்திரத்தினைக் கொண்டு கலகலப்பாகியுள்ளார் இயக்குநர். ஒரே காட்சியில் தான் தோன்றுகிறார் எனினும் தனது வழக்கமான முத்திரையைப் பதிக்கிறார் சமுத்திரக்கனி. சஞ்சய் ராமசாமியாக வரும் சூரி மட்டும் தான் ஒட்டாமல் உறுத்துபவராக உள்ளார்.

கதை சொல்லுவதில் அதீத ஆர்வமுடையவள் நயனா. அவள் கதையில் அனுமன், ஸ்பைடர் மேன், ஹல்க், டோரா என அனைவரும் வந்து ரசிக்க வைக்கின்றனர். அதையும் 2டி-இல் காட்சிப்படுத்திப் பிரமாதப்படுத்தியுள்ளனர். ஆனால், அதே நயனா, டேலன்டினா (Talentina 2014) எனும் நிகழ்ச்சியில், தன் குழந்தை கலை மனத்தைத் திறக்காமல், பாண்டிராஜின் திரைக்கதையையே புறா கதையாக்கிச் சொல்லியுள்ளது சோகத்திலும் பெருஞ்சோகம். அந்தக் காட்சி, திரைக்கு உள்ளும் வெளியிலும் இருக்கும் பார்வையாளர்களிடம் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், நயனாவையும் பெரியவர்கள் உலகத்துக்குக் கொண்டு வந்து, விக்ரமன் பட நாயகி போல் மேடையில் “ஃபீல்” செய்ய வைத்துவிட்டார் பாண்டிராஜ்.

பாலசுப்பிரமணியனின் ஒளிப்பதிவு படத்தின் பெரும் பலம். அவர் உபயோகித்திருக்கும் ‘கலர் டோன்’ குழந்தைகளைக் கவரும் விதத்தில் அற்புதமாக உள்ளது. வண்ண மயமான பலூன்களில் தொடங்கி, பல நிற காகிதக் கப்பல்களில், ADHD (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாடிருந்து சாதித்தவர்களின் புகைப்படங்களைச் சொருகி, பெற்றோர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக முடிகிறது படம். எனினும் ADHD பற்றிய புரிதலைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறவிடுகிறார் பாண்டிராஜ். 

பசங்க – 2, அவசியமான அழகான ஹைக்கூ.

பூலோகம் விமர்சனம்

$
0
0

Bhooloham Vimarsanam

பூலோகம் என்ற குத்துச் சண்டை வீரனுக்கும், ஒரு தொலைக்காட்சி நிறுவன முதலாளிக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை.

தொடக்கம் முதல் இறுதி வரை படம் பார்வையாளர்களைக் கட்டிப் போடுகிறது. சொல்லப் போனால், உலோகம் போன்ற இறுகிய உடம்புடனும், கனல் தெறிக்கும் பார்வையுடனும் பூலோகமாகக் கட்டிப் போடுகிறார் ஜெயம் ரவி. தனி ஒருவன் வெற்றியில் இருந்தே மீளாத ஜெயம் ரவிக்கு, 2015-ஐ மறக்கமாலிருக்க மற்றொரு வலுவான காரணமாக இப்படமும் சேர்ந்து கொள்ளும்.

“நான் ஒரு எச்சக்கல பொறுக்கி” என தன் ஊழியர்கள் முன்பே சொல்லிக் கொள்ளும் ‘மிகக் கெட்ட முதலாளி’யாக பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். வடச்சென்னையின் மனிதர்களை இயல்பாகச் சித்தரித்திருக்கும் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், வில்லன்களைக் கோமாளிகளாகச் சித்தரித்துள்ளார். தன் பெரிய கனவுகளையும் லட்சியங்களையும் குயுக்தியையும் பார்வையாளர்களுக்குப் பேசியே கடத்துகிறார்; அதே போல், ஸ்கர்ட் அணிந்து வரும் நாதன் ஜோன்ஸ், ஹிஸ்டீரியா வந்தது போல் கத்திக் கொண்டிருக்கும் அர்பித் ரன்கா, பணக்கார மாணவன் நாராயணன் என லாஜிக்கற்ற வலிந்து திணிக்கப்பட்ட வில்லத்தனங்கள் அயர்ச்சியை அளிக்கின்றன. மேலும், ஜனநாதன் தனது வசனங்களின் மூலம், குத்துச் சண்டையைக் காட்டுமிராண்டித்தனமானது என்றும், கொலைக்களம் போலவும் சித்தரிக்கிறார்.

குத்துச்சண்டை என்பது அழகானதொரு “தற்காப்புக் கலை”. அதன் பெருமையை உணர்த்தும் ஒரே ஒரு வசனம் கூட படத்தில் இல்லை. பெளன்ஸராகப் போகலாம், வி.ஐ.பி.க்கு பாடி கார்டாகப் போகலாம், சேட்டுகளுக்கு வட்டி வசூலிக்கும் ஆளாகப் போகலாம் என பாக்ஸர்களை மலிவாகவே சித்தரித்துள்ளனர். ‘ரிங்கில் மோத வரும் ஆளை எதிரியாகத்தான் பாவிப்பேன். ஆம், அது தப்பு. ஆக, பாக்ஸிங்கைத் துறப்பேன்’ என்கிறார் பூலோகம். முதலாளித்துவத்தை எதிர்க்க பூலோகம் பாக்ஸிங்கில் ஈடுபடுகிறாரே தவிர, பாக்ஸிங் மீதுள்ள காதலால் அன்று. அந்தக் கணத்தில், படம் ‘ஸ்போர்ட்ஸ்’ படமென்ற அந்தஸ்தை முற்றிலுமாக இழந்துவிடுகிறது. படத்தின் உண்மையான நாயகன் எனப் பார்த்தால், பாக்ஸிங்கைக் காதலிக்கும் “ஆறுமுகம்” கதாபாத்திரம்தான்.

Trisha Tattoo in Thighs

காதலிக்க மட்டும் என்றில்லாமல், நாயகனின் லட்சியத்தில் அக்கறை எடுத்து அவருக்கு ‘ட்ரெயினிங்’ தரும் ஆசானாகவும் அசத்துகிறார் த்ரிஷா. தான் உயிருக்கு உயிராய்க் காதலிக்கும் பூலோகத்தின் டேட்டூவை தன் உடலெங்கும் வரைந்து கொள்ளும் கெளரி சிந்துவாக வருகிறார் த்ரிஷா. தொப்புளுக்குக் கீழ் அடித்தால் ‘ஃபவுல்’ என்ற விதியில் ஊறிய பூலோகத்துக்கு, த்ரிஷாவின் கால்களில் (தொடையில்) வரையப்படும் உருவ டேட்டூக்களை அவர் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதவில்லை. காதலின் வெளிப்பாடாக எண்ணி மகிழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டன்ட் மாஸ்டர் லார்னெல் ஸ்டோவெலின் சண்டைக் காட்சிகளும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் நம்மை சீட் நுனியில் உட்கார வைத்து விடுகிறது.

பூலோகம், பிரம்மாண்டமானதொரு ஆக்ஷன் என்டர்டெயினர்.

நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க விமர்சனம்

$
0
0

Naalu Peru Naalu Vithama Pesuvanga Vimarsanam

நான்கு பேர் நான்கு விதமாகப் பேசுவார்களே என்ற தயக்கத்தாலேயே சிலர் எக்காரியத்தையும் முயற்சி செய்ய மாட்டார்கள். ஆனால், இயக்குநர் L.மாதவனுக்கு அப்படி எந்தத் தயக்கமும் இல்லை என்பது மட்டும் திண்ணம். மிகத் தைரியமாகஒரு ‘குறி’ப்பிட்ட அவஸ்தையைப் படமாக்கியுள்ளார். .

அழுக்கனுக்கு அஞ்சு பணம் செலவு என்பார்கள். அப்படித்தான் செலவினத்தைக் குறைக்க நினைக்கும் சரவணனும், அதனாலேயே ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அதிலிருந்து மீண்டு அவன் விரும்பிய பெண்ணை மணந்து கொள்கிறானா இல்லையா என்பது தான் படத்தின் கதை.

படத்தின் திரைக்கதை, நம்மை 25 ஆண்டுகளுக்கு முன் கொண்டு சென்று விடுகிறது என்றால் அது மிகையில்லை. உலகத்தின் வேகத்தோடு ஓடாமல், அதை எதிர்த்து பழைமை வழுவக் கூடாதென எதிர் நீச்சல் போட மிகச் சிலராலேயே இயலும். எழுதித் தயாரித்து இயக்கியுள்ள L.மாதவன் அத்தகையவரே!

பழைய பாணி படமென்பதால், நாயகன் இந்திரஜித்துக்கும் நாயகி தேவிகா மாதவனுக்கும் கோயிலில் முதல்முறை பார்க்கும் பொழுதே காதல் வந்து விட்டதென நினைக்க வேண்டாம். அங்கே தான் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குநர். ஆம், நிதானமாக இரண்டாம் முறை பார்க்கும் பொழுது தான் சட்டென காதல் மலர்கிறது. இப்படிப் படத்தில் ஏகப்பட்ட சுவாரசியங்கள் (!?).

‘கல்கோனா கண்ணழகி.. கற்கண்டு சொல்லழகி’ என்று யுகபாரதியின் வரிகளில் தொடங்கும் பாடல் துள்ளலாய் உள்ளது. அப்பாடலில், இசையமைப்பாளர் A.K.ரிஷால் சாய், ஒளியமைப்பாளர் D.S.வாசன், கலை இயக்குநர் ராகவாகுமார் ஆகியோர் ஒருவரையொருவர் முந்திக் கொள்ளப் பார்க்கின்றனர். ‘நாலு.. பேரு.. நாலு விதமா.. பேசுவாங்க’ என்று தலைப்பு போடும் பொழுது வரும் ராகமும் குரலும் ஈர்க்கிறது.

‘ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்’ எனும் தயாரிப்பு நிறுவன லோகோ வரும் அனிமேஷன் மிக அற்புதமாய் உள்ளது. கிருஷ்ணர் மந்தகாசமாய் நடந்து, தொங்கிக் கொண்டிருக்கும் வெண்ணைக் குடங்களை நோக்கி அசால்ட்டாய் துப்பாக்கியால் சுடுகிறார். சிதறும் வெண்ணெயில் நிறுவனப் பெயர் போடுகின்றனர். வாவ்..

சிங்கமுத்து, லொள்ளு சபா சுவாமிநாதன், சிவசங்கர் மாஸ்டர் என நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர். படத்தில் சில அபார நகைச்சுவைக் காட்சிகள் உண்டு. உதாரணத்திற்கு, ஃபோனில் பேசி மட்டுமே காதலிக்கும் பெண்ணை முதல் முறையாக நாயகன் பார்க்கிறார்; அந்தப் பெண் குண்டாக இருக்கிறார் (உருவத்தை கேலி செய்வது காமெடியில்தானே வருது!?); தான் வஞ்சிக்கப்பட்டு விட்டதாகக் கடுப்பாகும் நாயகன் உடனே டாஸ்மாக்கிற்கு ஓடி, ‘நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல’ என ஃபீல் செய்து ஒல்லியான பெண்களுடன் சேர்ந்து ஆடுகிறார். 

இப்படியாக முழுப் படமுமே ஒரே அறுச்சுவை தமாஷ்தான்.

அச்சம் தாண்டி உச்சம் தொடு

$
0
0

Point Break Tamil

ஹாலிவுட்டில் தயாராகும் ஆக்ஷன் படங்களுக்கு, நம் நாட்டில் எப்போதுமே தனியொரு வரவேற்பு உண்டு. இப்படங்கள், மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும் போது, வரவேற்பு இரண்டு மடங்காகும்! PVR பிக்சர்ஸ், ‘பாயிண்ட் பிரேக்’ படத்தை தமிழிலும் அதே தலைப்புடனே, ‘அச்சம் தாண்டி சிகரம் தொடு’ என்கிற பின்குறிப்புடன் வெளியிடுகின்றனர்.

கேத்ரீன் பிக்லோ இயக்கத்தில், கீனு ரீவ்ஸ் நடித்து 1991இல் வெளிவந்த ‘பாயிண்ட் ப்ரேக்’ படத்தில் சில புதிய மாற்றங்கள் செய்து, அப்படத்தின் மறு அவதாரமாக இப்படத்தைக் கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயமெனில், கதாபாத்திரங்களின் பெயர்கள் இந்து மதப் பெயர்கள் உள்ளன. மேலும், ஒரு வைரக் கொள்ளைக் காட்சியொன்றை மும்பையில் படமாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் இடம்பெறும் வீர விளையாட்டுகளில், சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களும் தோன்றி நடித்துள்ளனர்.

ஏகத்துக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றனர்.

பாயிண்ட் பிரேக் விமர்சனம்

$
0
0

Point Break Vimarsanam

முடிவெடுத்தே ஆக வேண்டிய ஒரு கட்டாயம் ஏற்படும் கணத்தையோ, இதற்கு மேல் அடக்கி வைக்க இயலாதென்று குமுறியெழும் அழுகையையோ, இனி பொறுக்க இயலாதென வெடித்தெழும் கோபத்தையோ ‘பாயின்ட் ப்ரேக்’ என்பார்கள். நாயகனுக்கு அப்படி இரண்டு ‘பாயின்ட் ப்ரேக்’கள் படத்தின் தொடக்கத்திலும் முடிவிலும் ஏற்படுகிறது. ஒன்று சோகத்திலும்; இன்னொன்று பரவசத்திலும். 

கடலலையில் சறுக்கி விளையாட ஏதுவான சற்றே நீடித்த அலை, கரையிலிருந்து கடலை நோக்கி நீளும் ஒரு நீர் முனையில் வந்து மோதும் இடத்தையும் ‘பாயிண்ட் பிரேக்’ என்பார்கள்.

எதிர் நாயகனாகச் சித்தரிக்கப்பட்டிருப்பவர் தான் நாயகன் எனத் தோன்றுகிறது. படம் முழுவதும் குறியீடுகளும் தத்துவங்களும் விரவிக் கிடக்கின்றன. நாயகன் பெயர் யூட்டா; எதிர்நாயகன் பெயர் போதி. சமஸ்கிருதத்தில், போதி என்றால் அக ஒளி அல்லது விழிப்பு நிலை எனப் பொருள். நவோஜா எனும் செவ்விந்திய இனமொன்றில், யூட்டா என்றால் மலைகளில் இருந்து வந்தவன் எனப் பொருள்.

படத்தின் முதல் காட்சியில், செங்குத்தான மலைமுகட்டுப் பாதை ஒன்றின் மீது தன் நண்பனுடன் பேசிக் கொண்டிருக்கிறான் பைக் வீரனான யூட்டா. அவனது பைக்கின் சக்கர சுழற்சியால் வாரி இறைக்கப்படும் மண் பார்வையாளர்கள் முகத்தில் விழுகிறது முப்பரிமாண அனுபவத்தில். அதகளமான ஓப்பனிங் ஆக்ஷன் காட்சி அது. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடத்தின் பெயரும் யூட்டா (அமெரிக்கா) என்பது குறிப்பிடத்தக்கது. சிறிய பரப்பளவே கொண்ட பாதையற்ற நெட்டுக்குத்தலான பாறையின் உச்சிக்கு, மலை விளிம்பில் இருந்து பைக்கில் பாய்கின்றனர். அங்கு நடக்கும் அசாம்பாவிதம் யூட்டாவை உடைத்து நொறுக்கி விடுகிறது. ஆனால், இது போன்ற அசாம்பாவிதங்கள் நேரிடும் போதெல்லாம் ‘போதி’ சலனமின்றிக் கடந்து விடுகிறார். போதியை எதுவும் உடைப்பதில்லை.

ண்ட் பிரேக்

போதியும் அவரது நண்பர்களும் இயற்கை ஆர்வலர்கள். ஓஸாகி என்பவர் இயற்கைக்கு மரியாதை செய்யும் விதமாக எட்டுச் சோதனைகளின் பட்டியலை உருவாக்குகிறார். எல்லாமே விபரீத விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட சோதனைகள். அதை ‘ஓஸாகி-8′ என அழைக்கின்றனர். அதை முடிப்பதன் மூலம் ‘அக ஒளி (Enlightenment)’ கிடைக்குமென யூட்டா நம்புகிறான்; இல்லை அது தளைகளில் இருந்து விடுவிக்கும் (Liberate) என ஓஸாகி நம்பியதாக போதி சொல்கிறார். எஃப்.பி.ஐ. (FBI)-யான யூட்டா போதியைத் தடுக்க நினைக்கிறான். தெரிந்தோ தெரியாமலோ, போதியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சம்சாராங்களை எல்லாம் அழிக்கிறான். சம்சாரம் என்றால் தொடரும் சுழற்சி என பொருள் கொள்ளலாம். அதாவது மறுபிறவியை உறுதி செய்யும் தளை. அசந்தர்ப்பமாக, போதியின் குழுவில் இருக்கும் ‘சம்சாரா’வைக் கொன்று விடுகிறான் யூட்டா. இது ஓர் அழகான குறியீடு.

போதியும் யூட்டாவும் எதிரெதிர் நோக்கங்களோடு இயங்கினாலும், அவர்களின் ஆதார விருப்பம் ஒன்றே! இயற்கையை ஆராதிப்பது; அதன் சவாலை விபரீதமான முறையில் எதிர்கொள்வது. க்ளைமேக்ஸில், போதி மீண்டும் யூட்டாவின் உறுதியை உடைக்கிறார். பிரம்மாண்டமாய்த் திரண்டெழும் பெரிய அலையொன்றில் தன்னை விடுவித்துக் கொள்கிறார் போதி.

எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸை மிக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்கள். முதல் காட்சியிலேயே, யூட்டா மலைமுகட்டுப் பாதையில் செய்யும் பைக் சாகசம்; அந்தரத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது; கடலலைகளில் சறுக்குவது; காற்றுக்கு மரியாதை செய்ய சிகரத்தில் இருந்து பறவை போல் உடையணிந்து (WingSuit), குதித்து மிதப்பது; பனி மலைச் சரிவுகளில் சறுக்குவது; மிக உயரமான பேரருவியொன்றின் மருங்கில் பாறைகளைப் பிடித்து ஏறுவதென படம் முழுவதும் அதகளம் செய்துள்ளனர். எரிக்சன் கோரின் ஒளிப்பதிவு ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது. படத்தின் இயக்குநரும் அவரே! பேரலைகளில் மூழ்கித் திளைக்க நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் என்றே சொல்லவேண்டும். சுவிட்சர்லாந்து பனி மலைகளின் மீது பார்வையாளர்களை பறவை போல் மிதக்கவும் வைத்துள்ளார்.

சாகசப் பிரியர்கள் தவற விடக்கூடாத படம்.

தாரை தப்பட்டை விமர்சனம்

$
0
0

Thaarai thappattai vimarsanam

இளையராஜாவின் இசையில் வந்திருக்கும் 1000வது படம் என்ற வரலாற்றுச் சிறப்பினைப் பெற்ற படம்.

சன்னாசி கரகாட்டக் குழு, அதன் பிரதான ஆட்டக்காரி சூறாவளி இல்லாமல் நொடிந்து போகிறது. சூறாவளிக்கு என்னானது என்பது தான் படத்தின் கதை.

சூறாவளி என்ற கதாபாத்திரத்தின் பெயருக்கு ஏற்ப வரலட்சுமி அசத்தியுள்ளார். முதல் பாதி படத்தைத் தனியொருவராகச் சுமக்கிறார். சன்னாசி மீது அவர் வைத்திருக்கும் காதல் பிரம்மிப்பூட்டுகிறது. அதை வரலட்சுமி மிக ஆர்ப்பாட்டமாக முன் வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் இவர் தோன்றும் காட்சிகள் மட்டுமே!

படத்தின் நாயகனான சன்னாசியை விட அவரது தந்தையாக வரும் சாமி புலவர் ஈர்க்கிறார். சன்னாசியாக சசிகுமாரும், சாமி புலவராக G.M.குமாரும் நடித்துள்ளனர். கரகாட்டக் குழுவினர் எதிர்கொள்ளும் வறுமையை ஊறுகாய் போல் தொட்டுச் சென்றுள்ளார் பாலா. பாலாவின் படங்களுடைய தீவிரத்தன்மையை, படம் நெடுகே வரும் மெல்லிய எள்ளல்கள் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும். பரதேசியினைப் போலவே இப்படத்திலும் அத்தகைய எள்ளல்கள் இல்லாதது பெரும்குறை.

படம் முழுக்கவே திரைக்கதையில் ஒரு மெத்தனமும் கோர்வையின்மையும் அலட்சியமும் தெரிகிறது. கரகாட்டக் கலை (!?) அல்லது பொதுவில் நாட்டுப்புறக் கலை, எப்படி அணுகப்பட வேண்டுமென்ற அக்கறை ஒரே ஒரு காட்சியில் கூட படம் பிரதிபலிக்கவில்லை. மலிவான கேமிரா கோணங்களால் வரலட்சுமியையும் ஆனந்தியையும் கலையையும் அசிங்கப்படுத்தியுள்ளார் பாலா.

நாயகி நாயகன் மீது வைத்துள்ள காதலையும், படத்தின் முடிவையும் பருத்தி வீரனில் இருந்து எடுத்துள்ள பாலா, வில்லனை மட்டும் தன் படங்களில் இருந்தே எடுத்துக் கொண்டுள்ளார். ஸ்டூடியோ 9 நிறுவனர் R.G.சுரேஷ் வில்லனாக மிரட்டியுள்ளார். ஆம், அவர் ஏற்றிருக்கும் கருப்பையா எனும் கதாபாத்திரத்தை அப்படிச் செதுக்கியுள்ளார் பாலா. அவதாரங்கள் நிகழ்த்தும் சம்ஹாரத்தின் வெற்றியும் சிறப்பும், அரக்கன் எந்தளவுக்கு ஈவிரக்கமற்றவனாக இருக்கிறானோ, அதன் பொருட்டே நிர்ணயிக்கப்படும். பாலாவின் குரல் வளை மோகத்துக்கு தீனி போடுமளவு கெட்டவன் கருப்பையா.

பாலாவின் சம்ஹார இச்சையும், இளையராஜாவின் பக்தி ஆவேசமும், படத்தின் இறுதி இருபது நிமிடங்களில் நம்மை நரகத்துக்கே இட்டுச் செல்கின்றன.


கெத்து விமர்சனம்

$
0
0

Gethu Tamil Review

கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட துளசி ராமனை அவரது மகன் சேது எப்படி மீட்கிறான் என்பது தான் படத்தின் கதை.

சேதுவாக உதயநிதி ஸ்டாலின். நகைச்சுவைப் படத்திலிருந்து அடுத்த கட்ட சோதனையை அழகாகச் செய்து பார்த்துள்ளார். சந்தானம் இன்றி வரும் உதயநிதியின் முதல் படம் என்ற விசேஷப் பெருமை இப்படத்திற்கு உண்டு. கதையின் நாயகனாக இருப்பதால், உதயநிதியின் முந்தைய கதாபாத்திரங்களை விட நூலகத்தில் பணி புரியும் சேது கொஞ்சமாக ஈர்க்கவே செய்கிறார்.

புத்தகத் திருடியாக வருகிறார் எமி ஜாக்சன். அதிலும் அவர் திருடும் புத்தகங்கள் எல்லாம் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வண்ணமுள்ளன. உதாரணத்திற்கு, ஜெயமோகன் எழுதிய வெள்ளையானை நாவலைத் திருடி ஆச்சரியம் ஏற்படுத்துகிறார். இப்படியொரு நாயகியை தமிழ்த் திரையில் உலவ விட்ட இயக்குநர் திருக்குமரனை எண்ணி வியக்காமல் இருக்கவே முடியவில்லை.

‘சாவி.. சாவி..’ என சின்னச் சின்ன வசனங்களிலும் தன் முத்திரையைப் பதிக்கும் அனுபவஸ்தராக சத்யராஜ், துளசி ராமன் எனும் விளையாட்டு ஆசிரியராக நடித்துள்ளார். அவரது மகளாக நடித்திருக்கும் பெண்ணும் கவனத்தை ஈர்க்கிறார். குறிப்பாக, தடைகளைத் தாண்டி அவர் ஓடி பயிற்சி எடுக்கும் காட்சிகள்.

M.சுகுமாரின் ஒளிப்பதிவில் கெத்து செம ஸ்டைலான படமாக மிளிர்கிறது. ஸ்னைப்பராக வரும் விக்ராந்த், அந்தக் கதாபாத்திரத்துக்குச் சரியான தேர்வு. ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கமாலைக் கொல்ல விக்ராந்த் வகுக்கும் வியூகம் ரசிக்க வைக்கிறது. ‘வொயின் ஷாப்’ ஓனராக வரும் மைம் கோபியும், அவரது கவுண்சிலர் அண்ணனும் கூடக் கச்சிதமாகப் பொருந்துகின்றனர்.

மான் கராத்தே படத்துக்கும், இந்தப் படத்துக்கும் தான் எவ்வளவோ வேறுபாடு? இயக்குநர் திருக்குமரன் அழகான த்ரில்லர் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

தி டேனிஷ் கேர்ள் விமர்சனம்

$
0
0

The Danish Girl Tamil Review

The Danish girl (A)

உருவப்பட ஓவியரான கெர்டா, தன் கணவரான எய்னரிடம் பெண்களின் உடை அணிந்து மாடலாக நிற்கச் சொல்கிறார். தன் மனைவிக்கு உதவ பெண்களின் உடையை அணியும் எய்னர், தன்னைப் பெண்ணாக உணரத் தொடங்குகிறார். பின் என்னாகிறது என்பது தான் படத்தின் கதை.

2000 ஆவது ஆண்டு, எய்னரின் வாழ்க்கைச் சரிதத்தை அடிப்படையாகக் கொண்டு டேவிட் எபர்ஷோஃப் எழுதிய ‘தி டேனிஷ் கேர்ள்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்ட படமிது. புனைவு கலக்கப்பட்ட அவரது நாவல் அழகானதொரு காதலை முன்னிறுத்துகிறது. அக்காதலை, படம் நெடுகே பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது லுசிண்டாவின் திரைக்கதை.

காதலித்து மணந்து கொண்ட கணவன், ஆறு வருடங்களாக அன்பும் நேசமும் இயைந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, ‘நானொரு பெண்ணாக என்னை உணர்கிறேன்’ என்று சொன்னால் அந்த மனைவியின் மனநிலை எப்படி இருக்கும்? கெர்டாவாக அலிசியா விகேண்டர் அசத்தியுள்ளார். தன் கணவனுக்கு பெண் உடை அணிவித்து அழகு பார்க்கும் பொழுதும், கணவனின் மாற்றம் கண்டு வருந்தும் பொழுதும், கணவரின் பால் மாற்றுச் சிகிச்சைக்கு அவருக்குத் துணையாக இருக்கும் பொழுதும், அலிசியா பிரதிபலிக்கும் கெர்டாவின் ஆழமான காதல் நம்மைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்வது அசாத்தியமான காரியமாகிறது. அதனால் தான், கெர்டாவாக நடித்ததற்காக விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறார் அலிசியா.

இயற்கை நிலக்காட்சி ஓவியர் எய்னராக எடி ரெட்மெய்ன் கலக்கியுள்ளார். எய்னரின் மனக் குழப்பங்களையும், உள்மன ஆசையையும் அற்புதமாக தனது நடிப்பில் கொண்டு வந்து விட்டிருக்கிறார் எடி. தான் ஏற்கும் கதாபாத்திரங்களாக மாறி உள்ளிருந்து நடிக்கிறார் மனுஷன். தி தியரி ஆஃப் எவரிதிங் படத்தில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கை எப்படி கண் முன் கொண்டு வந்தாரோ, அப்படி இந்தப் படத்தில் லில்லியை கண் முன் கொண்டு வந்து விடுகிறார். ஓவியர் எய்னரையும் மறந்து, பாதி படத்திற்கு மேல் எடியை ‘லில்லி’யாகத்தான் திரையில் காண்பீர்கள்; உணர்வீர்கள்.

இந்தப் படத்தை ரசிக்க உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. எய்னரின் அகத்தை தன் நடிப்பைக் கொண்டு எடி உணர்த்தினால், அலெக்சாந்தர் டெஸ்ப்ளட்டின் மனதை ஊடுருவும் பின்னணி இசை முழுப் படத்தையுமே நமக்குக் கடத்துகிறது. ஈவ் ஸ்டீவார்டின் கலை வடிவமைப்பும், பேகோ டெல்கோடாவின் உடை வடிவமைப்பும் 100 வருடத்து முந்தைய டென்மார்க்கிற்கே அழைத்துச் செல்கிறது. கதையின் கனத்தையும், அது உணர்த்தும் ஆழமான வலியையும் காதலையும் மீறி, படம் ஒரு விஷூவல் விருந்தென்றே சொல்லவேண்டும்.

எந்த மருத்துவருக்குமே எய்னரின் தவிப்பு புரிவதில்லை. மனப்பிறழ்வென்றே முத்திரை குத்துகின்றனர். ஒரே ஒரு மருத்துவர் மட்டும் காது கொடுத்துக் கேட்கின்றார்.

“நான் என்னைப் பெண்ணாக உணர்கிறேன்” – எய்னர்.

“நானும் அவரை அப்படித்தான் உணர்கிறேன்” – கெர்டா.

படத்தின் கதை நிகழும் வருடம் 1920களின் இறுதி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான அறுவைச் சிகிச்சை, எய்னருக்கே முதல் முறையாக நிகழ்த்தப்படுகிறது. முடிவு எப்படி இருக்குமெனத் தெரியாது. ஆனால், எய்னருக்குள் வாழும் லில்லிக்கோ அச்சிகிச்சை மிக அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு எய்னரின் பால்ய கால நண்பன் மத்தியாஸ் ஸ்கூனார்ட்ஸும் ஆதரவாக இருக்கிறான். படம் கவிதையாகும் இடங்கள் இவையே!

லில்லிக்குக் கிடைக்கும் அன்பும் அனுசரணையும் காதலுமே படத்தைக் கொண்டாட காரணமாகிறது. அறுவைச் சிகிச்சை முடிந்ததும், லில்லி தான் கண்ட கனவைப் பற்றிச் சொல்கிறாள்.

“நான் என் அம்மா கையில் குழந்தையாக இருக்கிறேன். அவங்க என்னை லில்லின்னு கூப்பிடுறாங்க.”

இது எத்தகைய மகத்தானதொரு கனவென நிராகரிக்கப்படும் திருநங்கைகளாலே உணர முடியும். இயக்குநர் டாம் கூப்பர், அந்தக் கனவு சுமக்கும் ஏக்கத்தை படம் பார்க்கும் அனைவரையுமே உணரச் செய்து விடுகிறார். நாயகன் எடியும், இசையமைப்பாளர் அலெக்சாந்தர் டெஸ்ப்ளட்டும் படத்தைக் காவியமாக்கி விடுகின்றனர்.

‘நானொன்றும் சளைத்தவனில்லை’ என ஒளிப்பதிவாளர் டேனி கோஹன், இறுதிக் காட்சியில் தன் ரம்மியமான ஒளிப்பதிவின் மூலம், முழுப் படமுமே ஒரு விஷூவல் கவிதை தானென முடித்து வைக்கின்றார்.

கதகளி விமர்சனம்

$
0
0

Kathakali Vimarsanam

கடலூர் மீனவர்களின் தலைவன் தம்பாவைக் கொன்ற பழி, அமுதவேல் மீது வந்து சேருகிறது. அந்தப் பழியால் அமுதவேலின் குடும்பத்திற்கு என்ன நேர்கிறதென்றும், அதிலிருந்து மீள அமுதவேல் எப்படி கதகளி ஆடுகிறான் என்பதும் தான் படத்தின் கதை.

‘கதகளி ஆடுதல்’ – சக்தியையோ வலிமையையோ நிரூபித்தல் என்று தலைப்பினை பொருள் கொள்ளலாம்.

வழக்கமான நாயகன், நாயகி, வில்லன் தான் எனினும் பாண்டிராஜின் திரைக்கதையில் படம் சுவாரசியம் பெறுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலாக நடித்திருக்கும் ஸ்ரீஜித் ரவியின் ஆர்ப்பாட்டமற்ற குயக்தி அதிரச் செய்கிறது. அதிகாரம் தவறான நபரின் கையில் கிடைத்தால் என்னாகுமென அழுத்தமாகப் பதிந்துள்ளார் பாண்டிராஜ். பசங்க – 2 ஏற்படுத்திய தாக்கம் மறையும் முன், முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையில் கையெடுத்து அற்புதமான த்ரில்லரைக் கொடுத்துள்ளார். ஹிப்-ஹாப் தமிழாவின் பின்னணி இசை அதற்கு உதவுகிறது.

அமுதவேலாக விஷால். சண்டைக் கோழியில் இருந்தே அவர் ஏற்கும் கதாபாத்திரம் தான். படத்தின் கதை தான் விஷாலைக் காப்பாற்றுகிறது. பிரச்சனையில் சிக்கி வண்டியிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் குடும்பம் என்னாகுமோ என்ற கவலை நம்மை பதற்றம் கொள்ளச் செய்கிறது. விஷாலின் அண்ணனாக நடித்திருக்கும் மைம் கோபி, அப்பதற்றத்தைத் தக்க வைக்க உதவுகிறார். தம்பாவாக நடித்திருக்கும் மதுசூதன் ராவின் மிரட்டலான உடல் மொழியை விட அவருக்கு டப்பிங் கொடுத்திருக்கும் சமுத்திரக்கனியின் குரல், தம்பாவை அதி கம்பீரமாகக் காட்டுகிறது.

மீனு குட்டியாக கேத்ரின் தெரசா. விறுவிறுப்பான படத்திற்குத் தடை செய்யும் விதமாகப் படத்தின் தொடக்கத்திலேயே காதல் காட்சிகள் உள்ளன. விஷாலின் நண்பர் தமிழ்ச் செல்வமாக நடித்திருக்கும் நபர் ஈர்க்கிறார்.

படத்தின் ஆணி வேர் தொழிற்போட்டி. இதில் நகைமுரண் என்னவெனில், தம்பா தனக்குக் கீழ் வேலை செய்தவன் முதலாளி ஆகக் கூடாதென நினைக்கிறார் என்றால், இன்ஸ்பெக்டர் சரவண வடிவேலோ தம்பாவைத் தொழிற்போட்டியாக நினைக்கிறார். யூகிக்கக் கூடிய படத்தின் முடிவை, யூகிக்க முடியாத அளவுக்குக் கொண்டு போகிறார் பாண்டிராஜ்.

ரஜினிமுருகன் விமர்சனம்

$
0
0

Rajinimurugan Vimarsanam

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் களமிறங்கியுள்ளது அக்குழு.

வேலையும் கவலையும் இல்லாத ரஜினிமுருகன் எப்படி தன் தாத்தா சொத்தை விற்கின்றான் என்பதுதான் படத்தின் கதை.

தோத்ரியும் ரஜினிமுருகனும் செய்யும் அலப்பறைகள் தான் படம். போதாக்குறைக்கு, இவர்களுடன் ஏழரை மூக்கனும் சேர்ந்து கொள்கிறார். தனி ஆவர்த்தனமாக ரஜினி வெறியராக வரும் வக்கீல் நீலகண்டனும் அசத்துகிறார். எனினும் படத்தின் நீளம் 159 நிமிடங்கள் என்பது இப்படத்திற்குச் சற்றே அதிகம்.

கதைக்குள் வில்லன் வலுவாக வந்த பின்னும், ‘வெயிட்’ எனச் சொல்லிவிட்டு காதலிக்கவும், பாட்டு பாடவும் போய் விடுகிறார் ரஜினிமுருகன். இந்தப் பொறுப்பற்ற கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் சிவகார்த்திகேயன். நாயகனால் காதலிக்கப்பட கீர்த்தி சுரேஷ்.

தோத்ரியாக வரும் சூரி படத்தின் கலகலப்புக்கு உதவுகிறார். வேதாளம் படத்திலேற்ற பாத்திரத்தினைப் போல், தனக்கு வராதததை மிகைப்படுத்தி முயலாமல் சூரி இது போல் பாத்திரங்களில் கவனம் செலுத்தினால் நலம். நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் ராஜ்கிரணும், நாயகனின் தந்தையாக வரும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தமும் கூட படத்தின் கலகலப்புக்கு உதவியுள்ளனர்.

ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி பட்டையைக் கிளப்பியுள்ளார். அவரைத் தவிர வேறு யாரையும் இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்திப் பார்க்கவே முடியாது. வக்கீல் நீலகண்டனாக நடித்திருக்கும் கன்னட நடிகர் அச்யுத் குமாரும் அற்புதமான தேர்வு. பார்வையாலேயே சொல்ல விரும்புவதை சொல்லி விடுகிறார்.

சூரிக்கொரு காதல் ட்ராக்கென காமெடிக்கு ஒரு காட்சியை வைத்துள்ளார் இயக்குநர் பொன்ராம். இப்படி, படத்திற்குத் தேவையில்லாத தனித் தனி நகைச்சுவைக் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. காட்சிகளை இன்னும் கோர்வையாக்கி, கதைக்குத் தேவையானதை மட்டும் உபயோகித்து படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாகி விடுமென இயக்குநர் ஞாபகம் வைத்துக் கொள்வது நலம்.

படத்தின் பெயர் போடும் பொழுது வரும், குண அமுதனின் புகைப்படங்கள் அட்டகாசமாய் உள்ளது. பொங்கல் தினத்தில் வெளியான படத்திற்கு, இதை விட அற்புதமாய் வேறெப்படி சிறப்பு செய்ய இயலும்? (சல்லிக்கட்டுப் புகைப்படங்களும் அதில் அடக்கம்).

சேதுபதி –டீசர்

சி.என். அண்ணாதுரை (அறிஞர் அண்ணா)

$
0
0

மாயலோகத்தில்..

அறிஞர் அண்ணாஅறிஞர் அண்ணாவைப் பற்றி சுருக்கமாக எழுதுவது மிகவும் சிரமமான காரியம். அவரைப் பற்றி எழுத வேண்டுமானால் ஒரு புத்தகம் தான் போட வேண்டும். மேலும், அவரைப் பற்றி தமிழ்கூறும் நல்லுலகில் அறியாதவர் யார்?

எனவே மிகச் சுருக்கமாகச் சில. காஞ்சிபுரம் என்றால் பட்டு மாத்திரமல்ல; அண்ணாவும் உடனேயே நினைவுக்கு வந்து விடுகிறார். 1909 செப்டம்பர் மாதம் பிறந்தார். நூறாண்டு கடந்து விட்டது.

அண்ணா, ஆரம்பத்திலிருந்தே தன்னை ஒரு சுயமரியாதைக்காரராகவே வெளிப்படுத்திக் கொண்டு வந்திருக்கிறார். எனவே அவர் நீதிக்கட்சிக் காரராக இருந்தது ஆச்சரியமில்லை. 1934இல் அவருக்கும் பெரியாரின் அறிமுகம் கிடைத்தது.

பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சரளமாகத் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மேடையில் பேசும் ஆற்றல் பெற்றிருந்தார்.

நீதிக்கட்சியில் அதன் கடைசிக் காலங்களில் சில நிர்வாகப் பொறுப்புக்களிலும் இருந்திருக்கிறார். இக்கட்சியின் அமைப்புச் செயலாளர், உதவிப் பொதுச் செயலாளர் பிறகு பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்தார்.

1937இல் இராஜாஜி சென்னை மாகாணத்தின் பிரதமர். அவர் பள்ளிகளில் இந்தியை விருப்பப் பாடமாகப் புகுத்தினார். இதற்கு நீதிக்கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் முதல் இந்தி எதிர்ப்புப் போர் உருவானது.

சென்னையில் இந்திக்கு எதிரான கூட்டமொன்றில் பேசிய அண்ணா கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

1944இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து திராவிடர் கழகம் உருவாயிற்று. இக்கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற வேண்டுமென்பது அண்ணாவின் ஆசை. பெரியார் அதற்கு உடன்படவில்லை.

அண்ணாவின் எழுத்துக்கள் முதலில் ‘பாலபாரதி’ இதழிலும், காஞ்சி மணிமொழியார் நடத்திய ‘நவயுகம்’ பத்திரிகையிலும் வெளிவந்து கொண்டிருந்தன.

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை மக்களிடையே எடுத்துச் செல்வதில் அண்ணாவின் பணி மகத்தானதாக இருந்தது. பிறகுதான் பெரியாரின் ‘குடியரசு’, ‘விடுதலை’ பத்திரிகைகளில் அண்ணாவின் எழுத்துக்கள் வெளிவர ஆரம்பித்தன. ‘விடுதலை’ யில் அண்ணாவின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது.

1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. பெரியார் – மணியம்மை திருமணம் இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

தி.மு.க. உதயமான பிறகு உதயமான பத்திரிகைகளான திராவிட நாடு, காஞ்சி பத்திரிகைகளில் அண்ணா ‘தம்பிக்குக் கடிதம்’ எழுதினார். மிகவும் பிரபலமாகப் பேசப்பட்ட பகுதி அது.

அண்ணாவின் மேடைப் பேச்சுக்கள் தமிழர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. மேடைப் பேச்சுக்கு அண்ணாவுக்கு இணையாக எவரும் கிடையாது என்கிற நிலை உருவாயிற்று. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அண்ணாவின் கூட்டம் எந்த ஊரில் நடைபெற்றாலும் அந்த ஊர் அன்று திருவிழாக் கோலம் பூண்டு விடும்.

அண்ணா ஆரம்ப காலத்திலேயே இலக்கியம், கலை போன்றவைகளில் நாட்டமுடையவராக இருந்தார். எனவே அவர் நாடகங்கள் இயற்றியது மிகவும் இயல்பான ஒன்று. ‘நீதி தேவன் மயக்கம்‘, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்‘ போன்ற நாடகங்கள் மிகவும் வெற்றியடைந்த நாடகங்கள்.

அண்ணாவின் ‘ஓர் இரவு’ நாடகத்தைப் பார்த்து வியந்த ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி அண்ணாவை தென்னாட்டு பெர்னாட்ஷா என வருணித்ததாகப் பதிவுகள் உள்ளன.

நாடகங்கள் தவிர கவிதை, சிறுகதை, நெடுங்கதை, திரைக்கதை என கலை வடிவத்தின் பல்வேறு துறைகளிலும் அண்ணாவின் பணி இருந்திருக்கிறது. திராவிட இயக்க இலக்கியவாதிகளின் தந்தை எனக் கூறும் அளவிற்கு அவரது ஆளுமை அவர் எழுதிய எழுத்துக்களில் காணப்பட்டது. இவரைப் பின்பற்றி ஏராளமான திராவிட இலக்கியவாதிகள் தோன்றினார்கள்.

திரைப்படத்துறையிலும் அண்ணா தடம் பதித்தார். 1949இல் வெளிவந்த ‘வேலைக்காரி‘ படம் மாபெரும் வெற்றிச் சித்திரம். கதை, திரைக்கதை, வசனம் அண்ணா.

இதே ஆண்டு வெளிவந்த என்.எஸ்.கிருஷ்ணனின் ‘நல்லதம்பி’ படத்தின் கதை வசனமும் அண்ணா அவர்களே கையாண்டார். இதுவும் ஒரு வெற்றிப்படம். இப்படத்தில் தான் என்.எஸ்.கே.யின் கிந்தனார் காலட்சேபம், மதுவிலக்குப் பிரசார நாடகமெல்லாம் இடம்பெற்று பெரும் வரவேற்பைப் பெற்றது.

1951இல் ‘ஓர் இரவு’, 1954இல் ‘சொர்க்க வாசல்’, 1956இல் ‘ரங்கோன் ராதா’ போன்ற படங்கள் வெளியாகி அண்ணாவின் புகழை மேலெடுத்துச் சென்றன.

மேலும், அண்ணாவின் படங்கள் அவரது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, கோட்பாடுகள் போன்றவற்றை சாமானிய மக்களிடம் எடுத்துச் செல்லும் கருவியாகவும் அமைந்தது. தன்னையும் ஒரு சாதாரண மனிதனாகவே அண்ணா எப்போதும் வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்.

அதுவரை சமூக இயக்கமாக இயங்கி வந்த தி.மு.க.வை தேர்தலில் கலந்து கொண்டு மக்களுக்காகப் பணியாற்றும் அரசியல் இயக்கமாக மாற்றும் தீர்மானத்தை திருச்சியில் நடைபெற்ற மாநாட்டிலே 1956இல் இயற்றி, முதன்முறையாக 1957இல் தேர்தலைச் சந்தித்தது தி.மு.க.

இத்தேர்தலில் தி.மு.க. 15 இடங்களை வென்றது. 1962இல் நடைபெற்ற தேர்தலில் 50 இடங்களைக் கைப்பற்றியது. காஞ்சிபுரத்தில் அண்ணா, நடேச முதலியார் என்னும் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். அதன்பின் நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டு பாராளுமன்ற மேலவைக்குச் சென்றார். அங்கு அவர் ஆற்றிய உரை சரித்திரம் படைத்தது. குள்ளமான அண்ணாவை ஏறெடுத்துப் பார்க்க வைத்த உரை அது.

ஒருகட்டத்தில் தி.மு.க.வை தடை செய்து விடுவார்கள் என்கிற ஐயப்பாடு எழ ஆரம்பித்தது. அதற்கு கழகத்தின் திராவிட நாடு பிரிவினை கோஷம் காரணமாக அமைந்திருந்தது. கட்சியைக் காப்பாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அண்ணாவிற்கு ஏற்பட்டது. கட்சியின் சில விதிமுறைகளை மாற்றியமைத்தார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதாக அறிவித்தார். ‘பிரிவினையைத் தான் கைவிட்டோம், அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ எனவும் அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டது.

1967இல் நடந்த தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றியை ஈட்டி, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா மிகுந்த பொறுப்புடன் மந்திரி சபையை அமைத்தார். மொத்தம் 9 மந்திரிகள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தார்மீக பயம் அவருக்கு இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் மதராஸ் மாகாணம், தமிழ்நாடு எனப் பெயர் பெற்றது. இருமொழிக் கொள்கை, சுயமரியாதைத் திருமணம் போன்றவற்றிற்கு சட்டபூர்வமான வடிவம் கொடுக்கப்பட்டது. தி.மு.க. அரசைப் பெரியாருக்குக் காணிக்கையாக்கினார்.

மக்களுக்கு அண்ணாவிடம் அளவில்லாப் பிரியம் இருந்தது. அதேசமயம் எதிர்பார்ப்புகளும் இருந்தன. ஆனால் அண்ணா முதல்வராக 23 மாதங்களே பதவி வகித்தார். 3-2-1969இல் அவர் அகால மரணமடைந்தபோது அவருக்கு வயது 59 வருடங்கள் 4 மாதங்களே ஆகியிருந்தன.

அண்ணா அவரது பெயரின் ஒருபகுதி மாத்திரமல்ல. லட்சோப லட்சம் தமிழர்களும், அவரை உடன்பிறந்த அண்ணனாகவே எண்ணியிருந்தார்கள்.

அண்ணா இறந்தபோது, தமிழகமெங்கும் லட்சக்கணக்கான அண்ணாவின் தம்பிகள் மொட்டையடித்துக் கொண்டு உடன் பிறந்த அண்ணன் மறைந்து விட்டதாகவே எண்ணி சோகத்தில் ஆழ்ந்தனர்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா புதைக்கப்பட்டு, அவரது நினைவாக சமாதியும் அமைக்கப்பட்டது சரித்திரம்.

அண்ணா ஒரு மாபெரும் சகாப்தம்.

திரையுலகில் அண்ணாவின் பங்களிப்பு:

1949 – வேலைக்காரி கதை, திரைக்கதை, வசனம்
1949 – நல்லதம்பி கதை, திரைக்கதை, வசனம்
1951 – ஓர் இரவு கதை, வசனம்
1954 – சொர்க்க வாசல் கதை, திரைக்கதை, வசனம்
1956 – ரங்கோன் ராதா கதை
1959 – தாய் மகளுக்குக் கட்டிய தாலி கதை
1961 – நல்லவன் வாழ்வான் கதை, வசனம்
1978 – வண்டிக்காரன் மகன் கதை

- கிருஷ்ணன் வெங்கடாசலம்

தாமி-போஸ்டர்


சேதுபதி –ஸ்டில்ஸ்

சர்வர் சுந்தரமாகும் சந்தானம்

$
0
0

சர்வர் சுந்தரம்

(முழு போஸ்டரைக் காண படத்தைச் சொடுக்கவும்)

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> இயக்கம் - ஆனந்த் பால்கி
>> இசை - சந்தோஷ் நாராயணன்
>> ஒளிப்பதிவு - ப்ரமோத் K.வர்மா
>> படத்தொகுப்பு - தினேஷ்
>> கலை - உமேஷ் J.குமார்
>> உடை - ஜாய் க்றிஸில்டா
>> டிசைன்ஸ் - கபிலன்
>> சண்டை - திலிப் சுப்புராயன்
>> மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா

அட்டி –இசை வெளியீட்டு விழா படங்கள்

அட்டி –படக்குழுவினர்

$
0
0

Atti cast n crew
நடிகர்கள்:

>> மா.கா.பா. ஆனந்த
>> அஷ்மிதா
>> ‘நான் கடவுள்’ ராஜேந்திரன்
>> அருள்தாஸ்
>> அழகு
>> ராம்ஸ்
>> மகாநதி சங்கர்
>> யோகிபாபு
>> கலை
>> மிப்பு
>> தங்கதுரை

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> தயாரிப்பு - E5 எண்டர்டெயின்மென்ட், இமேஜ்னரி மிஷன்ஸ், பரிநிதா புரொடக்ஷன்ஸ்
>> இயக்கம் - விஜய பாஸ்கர்
>> ஒளிப்பதிவு - விஜயபாஸ்கர்
>> இசை - சுந்தர் C.பாபு
>> படத்தொகுப்பு M.V.ராஜேஷ் குமார்
>> கலை - ஏழுமலை ஐயப்பன்
>> சண்டை - பவர் பாண்டியன்
>> பாடல் - சினேகன், கானா வினோத், கவிவர்மன், விஜயசாகர்
>> நடனம் - சுரேஷ்

மூன்றாம் உலகப் போர் விமர்சனம்

$
0
0

Moondram Ulagam Vimarsanam

2022 இல் நடக்கும் போரில், இந்தியாவிடம் சீனா தோற்கின்றது. அதற்குப் பழிவாங்கும் விதமாக, 2025 இல் சீனா எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பதுதான் படத்தின் கதை.

மிகக் குறைவான கதாபாத்திரங்களுடன் மிகக் குறைவான லோக்கேஷன்களில் எடுக்கப்பட்டுள்ள இயக்குநர் சுகன் கார்த்தியின் கன்னி முயற்சியே இப்படம். ஆனால், பிரம்மாண்டமான கதை. சி.ஜி. (கணினி வரையியல்) தொழில்நுட்பத்தின் மூலம் இயக்குநர் முடிந்தளவு கதையின் பிரம்மாண்டத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்த முனைகிறார்.

படத்தின் மொத்த சுமையும் மேஜர் சரவணன் மீது சுமத்தப்பட்டுள்ளது. பாலை படத்து நாயகன் சுனில் குமார் மேஜர் சரவணனாக நடித்துள்ளார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், காதல் மனைவியை இடையிடையே ஏக்கத்துடன் நினைவுகூர வேண்டும், சீன இராணுவத்தின் சித்திரவதைகளைத் தாக்குபிடிக்க வேண்டும், இறுதியில் நாட்டையும் காப்பாற்ற வேண்டும். எல்லாம் செய்கிறார். சீனரிடம் வீரமும் பெருமையும் பேசும் பொழுது ஈர்க்காதவர், க்ளைமேக்ஸ் காட்சியில் ஈர்க்கிறார்.

மேஜரின் மனைவி மதிவதினியாக அகிலா கிஷோர். மேஜரின் குடும்பம் பற்றிய காட்சிகள் வரும் பொழுதெல்லாம் ஓர் அந்நியத்தன்மை புகுந்து கொள்கிறது. நாயகனுக்கு தமிழ் முகம். அவரது பெற்றோர்களையோ, உறவினர்களையோ, நாயகனுடன் பொருத்திப் பார்க்க முடியாதபடி அந்நியமாக உள்ளார்கள்.

Moondram Ulaga Por Villanவில்சன் எனும் சீனரே படத்தின் வில்லன். உலகின் பழைமையான மொழி என்பதால் தமிழை எழுதப் படிக்கத் தெரிந்து வைத்திருக்கிறார். சில கோணங்களிலும், உச்சரிப்பு தொனியிலும் ‘பட்டணத்தில் பூதம்’ ஜாவர் சீதாராமனை ஞாபகப்படுத்துகிறார். அவரது தலை திரையில் தெரியும் ஒவ்வொரு முறையும் பில்டப் மியூசிக்கைத் தீட்டியுள்ளார் இசையமைப்பாளர் வேத்சங்கர். அதனால் ஒரு கட்டத்தில் அவரைப் பார்த்ததுமே பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்கி விடுகின்றனர்.

படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்துக்கும் பதினைந்து நிமிடங்கள் குறைவே! ஆனாலும் நீண்ட நேரமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தைத் தருகிறது. வசனங்கள் அதன் பங்கை சரியாகச் செய்யாததின் குறைபாடு அது. இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே நடக்கும உரையாடல்களே படத்தில் பிரதானம். மேலும், காட்சிகளில் தீவிரம் இல்லாமல் மிகச் சாதாரணமாக உள்ளது.

உதாரணத்திற்கு, ‘உண்மைய சொல்றியா இல்ல’ என சீன இராணுவ அதிகாரி, மேஜர் சரவணின் மனைவியுடைய புகைப்படத்திற்கு மொபைலில் முத்தமிடுறார். பல்லைக் கடிக்கும் மேஜர், “என்ன ப்ளாக்மெயில் பண்றியா?” எனக் கேட்டு, எங்களுக்கு குடும்பத்தை விட நாடு தான் முக்கியம் என்கிறார். சித்திரவதை செய்யும் சீனருக்கோ நாயகனின் நாட்டுப்பற்று சலிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி விடுகிறது.

Moondram Ulaga Por Heroஇப்படியான கடும் சித்திரவதைகள் செய்து கடுப்பாகும் சீனர், இறுதியில் மேஜர் சரவணனிடம் சீனாவின் ரகசிய திட்டத்தைப் போட்டு உடைத்து விடுகிறார். ஆஹா.. வாழ்க்கையின் எண்ணற்ற நகைமுரண்களில் இதுவும் ஒன்று. இந்தியாவைப் பழி வாங்க சீனா மேற்கொள்ளும் யுக்தியை நாயகர் எப்படித் தடுக்கிறான் என்பதுடன் படம் முடிகிறது.

Viewing all 1647 articles
Browse latest View live